Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காதலியை வெட்டிக்கொன்றுவிட்டு காதலன் தற்கொலை

சென்னை பெரியமேட்டில் லாட்ஜ் ஒன்றில் காதலியை கொன்றுவிட்டு காதலன் தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரியமேடு குமரப்பா தெருவில் உள்ள லாட்ஜில் நேற்று காலை வாலிபர் ஒருவர் இளம்பெண்ணை அழைத்து சென்று தங்கினார். லாட்ஜில் இருந்தவர்களிடம் தாங்கள் காதலர்கள் என்று கூறியே இருவரும் அறைஎடுத்து தங்கி இருக்கிறார்கள். முதல் தளத்தில் தங்கி இருந்த இருவரும் இன்று காலை 10 மணி வரையில் வெளியில் வராமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் அறையின் கதவை தட்டினார்கள். நீண்ட நேரமாக தட்டியும் கதவு திறக்கப்படாததால் கதவில் இருந்த சிறிய கண்ணாடி வழியாக உள்ளே பார்த்துள்ளனர். அப்போது இளம்பெண் படுக்கையறையில் அரை நிர்வாண கோலத்தில் பிணமாக கிடந்துள்ளார். அவருடன் தங்கி இருந்த வாலிபர் தூக்கில் தொங்கியபடி காணப்பட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக பெரியமேடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று லாட்ஜ் கதவை திறந்து உள்ளே சென்று இருவரது உடலையும் மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் பெயர் பவ்யா (21)என்பதும், இவர் சிவகங்கை மாவட்டம் தெற்கு சிங்கபுரி பாரதி நகரை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. தூக்கில் தொங்கிய வாலிபர் பெயர் பாரதி பெருமாள் (21) சென்னை ராமாபுரம் இந்திரா நகரை சேர்ந்தவர் என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
காதலர்களான இருவரும் நேற்று அறை எடுத்து தங்கி இருந்தபோது நள்ளிரவில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதில் காதலன் பாரதி பெருமாள், காதலி பவ்யாவை கழுத்தை அறுத்தும், உடலில் பல இடங்களில் சரமாரியாக வெட்டியும் கொடூரமாக கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட பவ்யாவின் இடதுபக்கத்தில் கழுத்து அறுக்கப்பட்டதில் பெரிய வெட்டுக்காயம் காணப்பட்டது. வலதுபுற கை மணிக்கட்டிலும் 2 பெரிய வெட்டுக்காயங்கள் இருந்தன. முழுங்கையிலும் சிராய்ப்பு காயங்கள் காணப்பட்டன. இதன்மூலம் தன்னை கொலை செய்த காதலனோடு பவ்யா லாட்ஜ் அறைக்குள்ளே கடுமையாக போராடி இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். காதலியை கொன்றுவிட்டு போலீசுக்கு பயந்து பாரதி பெருமாள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இருவரும் உயிரிழந்து விட்ட நிலையில் கொலைக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இருவரது காதலுக்கும் எதிர்ப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதுபோன்ற சூழலில் தான் இருவரும் அறை எடுத்து தங்கி இருக்கலாம் என்றும், அப்போது ஏற்பட்ட தகராறில் காதலியை கொன்றுவிட்டு பாரதி பெருமாள் தற்கொலை செய்து இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இருவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் சிங்கபுரியில் உள்ள பவ்யாவின் பெற்றோரும், ராமாபுரத்தில் உள்ள பாரதி பெருமாளின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் நடந்த சம்பவத்தை கேள்வி பட்டு கதறி அழுதனர். இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பெரியமேடு லாட்ஜில் இன்று பகலில் இருவரது உடல்களும் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டதை பார்க்க அந்த பகுதியில் உள்ள பொதுமக்களும் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

error: Content is protected !!