Skip to content
Home » கவனமாக ஓட்டு… 3 ஆண்டுக்கு முன்னரே ரிஷப் பண்ட்டை எச்சரித்த பிரபல வீரர்..

கவனமாக ஓட்டு… 3 ஆண்டுக்கு முன்னரே ரிஷப் பண்ட்டை எச்சரித்த பிரபல வீரர்..

  • by Senthil

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் நேற்று அதிகாலை டில்லியில் இருந்து சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டம் ரூர்கீக்கு சொகுசு காரில் சென்றார். காரை ரிஷப் பண்டே ஓட்டி சென்றார். நேற்று அதிகாலை 5.30 மணியளவில் டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் மங்கலார் என்ற பகுதியில் அதிவேகமாக சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரின் கண்ணாடியை உடைத்து வெளியே குதித்து ரிஷப் பண்ட் உயிர் தப்பினார். ஆனால், அவரது தலை, முதுகு, காலில் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து ஏற்பட்ட உடன் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. அப்போது, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ரிஷப் பண்டை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு தற்போது டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வாகனம் ஓட்டுவது தொடர்பாக ரிஷப் பண்ட்டை ஷிகர் தவான் 2019-ம் ஆண்டே எச்சரித்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. 2019 ஐபிஎல் கிரிக்கெட்டின் போது டெல்லி அணியில் ஷிகர் தவான் மற்றும் ரிஷிப் பண்ட் இடம்பெற்றிருந்தனர். அப்போது, ஒரு பேட்டியின் போது எனக்கு ஏதேனும் அறிவுரை நீங்கள் கூற விரும்பினால் கூறுங்கள் என்று ஷிகர் தவானிடம் ரிஷப் பண்ட் கேட்கிறார். அதற்கு, நீ வாகனத்தை கவனமாக ஓட்ட வேண்டும்’ என்று ஷிகர் தவான் அறிவுரை வழங்கினார். இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு பண்ட் விபத்தில் சிக்கிய நிலையில் இந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!