திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தெற்குதெரு பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் ஒரு தனியார் நிறுவனம் செல்போன் டவர் அமைக்க ஒப்பந்தம் செய்து சில மாதங்களுக்கு முன்பு பணிகளை துவங்கியது. அப்பொழுது அப்பகுதி குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு தெரிவித்து தடுத்து நிறுத்தினர.; இதனையடுத்து செல்போன் நிறுவனம் முறைப்படி அனுமதியும் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதியும் பெற்று போலீசார் பாதுகாப்புடன் சென்றமாதம் 22ம் தேதி மற்றும் நேற்று முன்தினம் 3ந்தேதி அன்று அப்பகுதியில்
பணியை துவங்க ஆயத்தமாகியபோது மூன்றாவது முறையாக மீண்டும் அப்பகுதியினர் தடுத்து பணியை நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியது. இந்தநிலையில் பணியை தடுத்து நிறுத்தியதாக செல்போன் டவர் அமைக்கும் நிறுவனம் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தது. இதனையடுத்து பணியை தடுத்ததாக முத்துப்பேட்டை திமிலத்தெரு பகுதியை சேர்ந்த அப்துல் ரஜாக் மகன் தாவூது கான், முகமது பாரூக் மகன் பரக்கத் அலி, சாகுல் ஹமீது மகன் யூசூப், ஹாஜா அலாவூதீன் மகன் அன்வர்தீன், கமால் முகைதீன் மகன் ஜெகபர் சாதிக் உட்பட 10பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.