அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சாலைகள் பணிகள், மழை நீர் வடிகால் பணிகள், வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கூட்டத்தில் செயலாளர் கார்த்திகேயன் மேயர் பிரியா, துணை மேயர், ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் பருவமழை எதிர்க் கொள்வதும் மண்டல வாரியாக பணிகள் வேகப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் நிலுவையில் இருக்கும் பணிகள், பிறதுறைகள் உடன் இணைந்து செய்வதில் இருக்கும் சிக்கல்கள் குறித்தும் பேசப்பட்டது.
ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “முதலமைச்சர் தலைமையில் நேற்று கூட்டம் நடைபெற்றது. அதில் சென்னையில் மழைநீர் வடிகால் ,வடிகால் இணைப்பு, சாலை பணிகள், குடிநீர் வழங்கல் துறை சார்பாக குழாய் அமைக்கும் பணிகள் நடைபெறுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இன்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சாலைகளை இரண்டு வார காலத்தில் சரி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம்.
மெட்ரோ குடிநீர் பணிகள் மேற்கொள்ள எந்த பள்ளமும் புதிதாக தோண்ட வேண்டாம் என்றும், மழை காலம் வர இருப்பதால் எந்த புதிய பணிகளும் மேற்கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தி இருக்கிறோம். நடைபெற்று வரும் பணிகள் விரைவாக முடித்து கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளோம், சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, வடிகால்களை ஒன்றோடு ஒன்று இணைக்கும் பணிகள் வரும் 30-ஆம் தேதி நிறைவடையும், இணைக்கும் பணிகள் முடிவு பெறாமல் இருக்கும் சில இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.