Skip to content
Home » திருச்சியில் இன்று மாலை …….. சூறாவளி பிரசாரம் தொடங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்

திருச்சியில் இன்று மாலை …….. சூறாவளி பிரசாரம் தொடங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்

  • by Senthil

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு வருகிற 19-ந்தேதி வாக்குப்பதிவு  நடைபெறுகிறது. 20ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வருகிற 27-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் ஆகும். வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும்  சில நாட்கள் மட்டுமே  இருப்பதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது.

தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொ.ம.தே.க. உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாகவும்,

அ.தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் மற்றொரு அணியாகவும், பா.ஜ.க., பா.ம.க., த.மா.கா., அ.ம.மு.க., புதிய நீதி கட்சி உள்ளிட்ட கட்சிகள் இன்னொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று (வெள்ளிக்கிழமை) தனது சூறாவளி தேர்தல் பிரசாரத்தை  முதல்வர் ஸ்டாலின்  திருச்சியில் இருந்து தொடங்குகிறார்.  திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம் சிறுகனூரில் பிரசார பொதுக்கூட்டம்  இன்று மாலை நடைபெறுகிறது.

இதற்காக அங்கு பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு, திருச்சி தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து அவர்களுக்கு வாக்கு சேகரிக்க உள்ளார். இன்று முதல்வர் அறிமுகம் செய்து  வைக்கும் இரு வேட்பாளர்களும் தேர்தல் களத்திற்கு புதுமுகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பொதுக்கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். இதற்காக இன்று மாலை 4.45 மணிக்கு சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் திருச்சிக்கு வருகிறார். அவருக்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். பின்னர் அவர் காரில் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்துக்கு செல்கிறார். பிரசார பொதுக்கூட்டம் முடிந்ததும் கார் மூலம் தஞ்சாவூருக்கு புறப்பட்டு செல்கிறார். இன்று இரவு தஞ்சாவூரில் தங்கும் அவர், நாளை (சனிக்கிழமை) மாலை  தஞ்சை மற்றும் நாகை நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கொரடாச்சேரியில் நடைபெறும்  பொதுக்கூட்டத்தில்  பிரசாரம் செய்கிறார். முதல்-அமைச்சர் திருச்சி வருவதையொட்டி இன்று காலை 10 மணி முதல் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!