டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காகஇந்த ஆண்டு வருகிற 12-ந்தேதி மேட்டூர் அணை டெல்டா பாசனத்துக்காக திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதற்கு முன்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம் . அதன்படி காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆறு, வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் 4773.13 கி.மீ. நீளத்திற்கு ரூ.90 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 189 பணிகள் 1068.45 கி.மீ. நீளத்துக்கு ரூ.20 கோடியே 45 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், தூர்வாரும் பணிகளை பார்வையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு தஞ்சை வந்தார்.
சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்த முதல்வர் இன்று காலை தஞ்சையை அடுத்த ஆலக்குடியில் உள்ள முதலைமுத்துவாரியில் நீர்வழித் தடங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது முதலைமுத்துவாரி ஆற்றின் தூர்வாரும் பணிகள் குறித்து முதல்-அமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து விண்ணமங்கலம் சென்று தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார். முதல்-அமைச்சருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.,நேரு, அன்பில் மகேஷ், டி.ஆர்.பி.ராஜா, மாவட்ட ஆட்சியர் , பழனிமாணிக்கம் எம்.பி, திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் சென்றனர்.
பின்னர் அங்கிருந்து லால்குடி பகுதியில் நடைபெறும் பணிகளை முதல்வர் ஆய்வு செய்து விட்டு இன்று பிற்பகல் விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.