எதிர்வரும் இந்திய நாடாளுமன்ற பொது தேர்தல்கள்-2024 முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவரிடையே வாக்களிப்பதன் முக்கியத்துவம் மற்றும் புதிய வாக்காளராய் பதிவு செய்தல் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம் இன்று (12.03.2024) மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கூகுள் மீட் (Google Meet) வாயிலாக காணொளிக்காட்சி மூலம் உரையாடினார்.
இந்த விழிப்புணர்வு கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 21 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த சுமார் 10,300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் காணொளிக்காட்சி வாயிலாக மாணவர்களிடையே பேசியதாவது:
இந்திய தேர்தல் ஆணையத்தால், நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்தப் பொதுத்தேர்தலின் மையக்கருத்து, “தேர்தல் பருவம் – தேசத்தின் பெருமதிம்” ஆகும். 01.01.2024 அன்று 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். அந்த வகையில் மாணவர்கள் அனைவரும் தங்களது பெயரை
தங்களது இருப்பிடத்தின் வாக்குச்சாவடி மையம் அமைவிடத்திற்குட்பட்ட வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்த்திருப்பீர்கள் என நான் நம்புகிறேன். மாணவர்கள் தங்களை வாக்காளர் பட்டியலில் இதுவரை சேர்த்துக் கொள்ளாமல் இருந்தால் படிவம் 6 பூர்த்தி செய்து அருகிலுள்ள, வட்டாட்சியர் அலுவலகம் அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை தொடர்பு கொண்டு இணைத்துக் கொள்ளலாம். அதேபோல voters help App என்ற ஆண்ட்ராய்டு செயலியின் மூலமும், https://voterportal.eci.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை இணைத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் குறித்த சந்தேகங்கள் அனைத்திற்கும் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு உங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு எண் 1800 425 9188 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். cVIGIL என்னும் மொபைல் ஆண்ட்ராய்டு செயலி மூலம் பதிவு செய்திடலாம். இந்த செயலியில் புகார்கள் பதிவு செய்தவர்கள் விவரம் எவருக்கும் தெரியாது. ஆகவே எவ்வித தயக்கம் இன்றியும் புகார்களை பதிவு செய்யலாம்.
அனைத்து இனம் வாக்காளர்களும் தங்களது வாக்குச்சாவடியினை அறிந்து கொண்டமைக்கு தங்களது வாக்குச்சாவடியில் சென்று செல்பி புகைப்படம் எடுத்து “நான் எனது வாக்குச்சாவடியினை அறிந்து கொண்டேன், வருகின்ற தேர்தலில் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்றுவேன்” என சமூக வலைதளங்களில் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதன் மூலம் நீங்கள் உங்கள் வாக்குச்சாவடிகளை தெரிந்து கொள்வதோடு உங்களை பின்தொடரும் அனைவரும் இச்செய்தியினை பின்பற்றி அவர்களது வாக்குச்சாவடி மையத்தினை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்திடும்.
இந்திய தேர்தலில் நீங்களும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் தவறாது வாக்களிக்க செய்து நமது ஜனநாயக கடமையினை ஆற்ற வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். “என் ஓட்டு என் உரிமை”, “என் ஓட்டு விற்பனைக்கு அல்ல” உள்ளிட்ட மையக்கருத்தினை மனதில் கொண்டு அனைவரும் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில், சார் ஆட்சியர் சு.கோகுல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வைத்தியநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) வித்யா, நியமன அலுவலர் (SVEEP)/ உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) கோபால்,, தேர்தல் வட்டாட்சியர் அருளானந்தம், அலுவலக மேலாளர் (குற்றவியல்) சிவா, வருவாய் வட்டாட்சியர்கள், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர்கள் மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்தந்த கல்லூரிகளில் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.