விருதுநகரைச் சேர்ந்த 20 பேர் நேற்று வேன் ஒன்றில் கோவை மாவட்டம் ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலுக்குச் சுற்றுலா வந்தனர். தரிசனத்தை முடித்துவிட்டு நேற்று மாலை அவர்கள் மீண்டும் விருதுநகர் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர்.
உடுமலை சாலையில் எரிசனம்பட்டி அருகே வேன் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது. இதில் வேனில் இருந்தவர்களுக்கு அதிர்ஷ்டவசமாக காயம் ஏற்படவில்லை. ஆனால், அதே சமயம் அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மீது வேன் பலமாக மோதியது.
இந்த விபத்தில் பைக்கை ஓட்டி வந்த கொடிங்கியத்தைச் சேர்ந்த தினகரன் (19) மற்றும் பின்னால் அமர்ந்து வந்த தேவனூர்புதூரைச் சேர்ந்த வேதஸ்ரீ (18) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். இருவரும் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி, இன்று காலை வேதஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார்.
விசாரணையில், உயிரிழந்த வேதஸ்ரீ பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வந்தது தெரியவந்தது. இது குறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

