தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. முதல் நாளில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 % இடஒதுக்கீட்டில் சிறப்பு பிரிவினர் பங்கேற்கின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று காலை தொடங்கியது. இன்று தொடங்கி இருக்கும் கலந்தாய்வில், அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவிகித ஒதுக்கீட்டுக்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கும் அடுத்து மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினர் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தொடங்கிய கலந்தாய்வில் பங்கேற்று, கல்லூரிகள் மற்றும் படிப்பை தேர்வு செய்யும் மாணவர்களுக்கான முடிவுகள் ஜூலை 15ஆம் தேதி காலை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு ஜூலை 13-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 30 வரை நடைபெற இருக்கிறது.
தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் வெளியிட்டிருந்தார். ஜூலை 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை மாற்றுத் திறனாளிகள், அரசுப் பள்ளி சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். ஜூலை 20-ஆம் தேதி முதல் பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெறும். இது ஒரு சில கட்டங்களாக ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
