மிக்ஜம் புயல் மழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களல் கடந்த 3, 4ம் தேதிகளில் அதிகனமழை கொட்டியது. இதனால் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். இதையடுத்து, வெள்ளம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகையாக ரூ.6000 ரொக்கமாக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, கடந்த 17ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே, வருமான வரி செலுத்துபவர்கள் மற்றும் மத்திய, மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் உயர் அலுவலர்கள், தங்களின் பாதிப்பு விவரங்களையும், வங்கி கணக்கு எண் ஆகியவற்றை தெரிவித்து நிவாரணத் தொகையினை பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.
இதையடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு குடும்ப அட்டை இல்லாதவர்கள் ரேஷன் கடைகளில் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கினர். இந்தநிலையில், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரேஷன் கார்டு இல்லாத 5.5 லட்சம் பேர் 6000 ரூபாய் நிவாரணம் கேட்டு விண்ணப்பித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. சென்னையில் 4.90 லட்சம் பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 29 ஆயிரம் பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 22 ஆயிரம் பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 14 ஆயிரம் பேரும் விண்ணப்பித்து இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. விண்ணப்பம் செய்த 5.5 பேரின் ஆவணங்கள் பரிசீலனையில் இருப்பதாக தமிழக அரசு கூறியிருக்கிறது.