Skip to content
Home » பெண் ஐஏஎஸ் அதிகாரி வீட்டுக்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்த துணை தாசில்தார் கைது

பெண் ஐஏஎஸ் அதிகாரி வீட்டுக்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்த துணை தாசில்தார் கைது

தெலுங்கானா மாநில முதல்-மந்திரியின் செயலாளராக பணியாற்றி வருபவர் பெண் ஐஏஎஸ் அதிகாரியான சுமிதா சபர்வால். ஐதராபாத்தில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள இவரது வீட்டிற்குள் நேற்று நள்ளிரவு அத்துமீறி நபர் ஒருவர் நுழைந்ததை அறிந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி, இதுகுறித்து பாதுகாவலருக்கு தகவல் அளித்துள்ளார். உடனடியாக வீட்டில் சோதனை செய்யப்பட்டபோது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் துணை தாசில்தாராக பணியாற்றி வரும் ஆனந்த் என்பது தெரியவந்தது.

ஆனந்தையும், அவரை அழைத்து வந்த அவரது நண்பரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் பதவி உயர்வு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரியிடம் பேசுவதற்காக வீட்டுக்குள் நுழைந்ததாக தெரிவித்தனர். நள்ளிரவில் பெண் ஐஏஎஸ் அதிகாரி வீட்டிற்குள் துணை தாசில்தார் முன் அறிவிப்பின்றி அத்துமீறி நுழைந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக பெண் ஐஏஎஸ் அதிகாரி தனது டுவிட்டர் பதிவில், இந்த சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. நள்ளிரவில் நபர் ஒருவர் என் வீட்டிற்குள் நுழைந்தார். சமாளித்து என் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தைரியம் இருந்தது. நீங்கள் எவ்வளவு பாதுகாப்பானவர் என்று நினைத்தாலும்- எப்போதும் கதவுகள்/பூட்டுகளை தனிப்பட்ட முறையில் சரிபார்க்கவும். #அவசர காலத்தில் 100க்கு டயல் செய்யவும் என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!