Skip to content
Home » குடிநீர் கேட்டு சாலை மறியல்… செந்துறை – ஜெயங்கொண்டம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு…

குடிநீர் கேட்டு சாலை மறியல்… செந்துறை – ஜெயங்கொண்டம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு…

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள பொன்பரப்பி கிராமத்தில் கீழ வீதி மற்றும் தேரடி தெருவில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு மாத காலமாக ஊராட்சி நிர்லவாகத்தின் மூலம், குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறி இன்று செந்துறை – ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த செந்துறை உதவி ஆய்வாளர் செந்தில் தலைமையிலான போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த ஒரு மாதத்தில் மூன்று நாட்கள் மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டது, சிலர் மோட்டார் வைத்து நீரை உறிஞ்சுவதால் அனைவருக்கும் தண்ணீர் கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும் குளிப்பதற்கு அருகில்

இருந்த ஏரியை பயன்படுத்த வந்த மக்கள், தற்போது நடைபெற்று வரும் சாலை விரிவாக்க பணி காரணமாக, ஏரியில் இருந்து மீன்கள் இறந்து அழுகி துர்நாற்றம் வீசுவதால், ஏரியில் குளிக்கவும், துணி துவைக்கவும் சிரமப்படுகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகத்தினர் அதிக நேரம் தண்ணீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில், மின்சார பற்றாக்குறை காரணமாக நீண்ட நேரம் தண்ணீர் வழங்க இயலவில்லை என தெரிவித்தனர். மேலும் குடிநீர் குழாயில் பொருத்தப்பட்டுள்ள மின்மோட்டார்கள் அகற்றப்படும் என அதிகாரி தெரிவித்தார். இததனையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. சாலை மறியலால், ஒரு மணி நேரம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!