துருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 3.20 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி துருக்கி – சிரியா எல்லை அருகே அமைந்துள்ளது.
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. அதேவேளை, இந்த பயங்கர நிலநடுக்கத்தால் 15 பேர் உயிரிழந்ததாக முதலில் தெரிவிக்கப்பட்டது. காலை 10 மணி நிலவரப்படி அங்கு சாவு எண்ணிக்கை 50ஐ தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது. இடிபாடுகளை அகற்றும் பணி முழு வீச்சில் நடக்கிறது. சேத விவரம் சில மணி நேரங்களில் தெரியவரும் என மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
துருக்கியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சிரியா, லெபனான், இஸ்ரேல் உள்பட அண்டை நாடுகளிலும் உணரப்பட்டது. சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 43 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கிறது. சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.