Skip to content
Home » கவர்னர் மாளிகை வாசலில் ஹேமந்த் சோரனை கைது செய்தது அமலாக்கத்துறை…

கவர்னர் மாளிகை வாசலில் ஹேமந்த் சோரனை கைது செய்தது அமலாக்கத்துறை…

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், ஜார்க்கண்ட் அம்மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன் மீதான பண மோசடி வழக்கில் விசாரணை நடத்த 8 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் எந்த சம்மனுக்கும் ஆஜராகவில்லை. இறுதியாக ஜனவரி 20 அன்று ஜார்க்கண்டில் உள்ள முதல்வரின் இல்லத்துக்கே சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணை முழுமையடையததால் மீண்டும் ஆஜராக வேண்டும் என ஹேமந்துக்கு 9-வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டது.  அதற்காக இரண்டு தேதிகள் அவரை தேர்ந்தெடுக்க சொல்லப்பட்டது. அதன்படி, ஜனவரி 29-ஐ தேர்ந்தெடுத்த ஹேமந்த், அன்றைய தினம் விசாரணைக்கு ஆஜராவதாக அமலாக்கத் துறைக்கு பதில் அனுப்பியதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால், இவற்றுக்கு மாற்றாக ஜனவரி 27 ம் தேதி பிற்பகலில் தனி விமானத்தில் ஹேமந்த் டில்லி சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகியின. தன் மீதான வழக்கின் சட்ட ஆலோசனைகளை பெறுவதற்காக ஹேமந்த் டில்லி சென்றிருந்தார் என்று சொல்லப்பட்டது. டில்லியில் இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து ஹேமந்த்தை தேடி ஜனவரி 29 காலை புது டில்லியில் உள்ள அவரின் சாந்தி நிகேதன் இல்லத்துக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் விரைந்தனர். ஆனால், முதல்வர் ஹேமந்த் அங்கு இல்லை.  அதேபோல் டில்லி வசந்த் விஹாரில் உள்ள அவரது அரசாங்க அலுவலகத்திலும் இல்லை. இப்படியாக அவரின் அதிகாரபூர்வ இடங்களில் சோதனையிட்ட அமலாக்கத்துறை  அதிகாரிகள் அவர் அந்த இடங்களில் இல்லை என்பது உறுதி செய்ததை அடுத்தது, அவரை காணவில்லை எனக்கூறி அவர் வெளியிடங்களுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க, அவர் வந்த தனி விமானத்தை சிறைபிடித்தது. இதற்கிடையே, கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் ஹேமந்த் சோரன் எங்கிருக்கிறார் என்கிற தகவல் யாருக்கும் தெரியவில்லை. அவரது நண்பர்கள் மற்றும் வேண்டிய அதிகாரிகளின் செல்போன்கள் அனைத்தும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தன.  ஹேமந்த் சோரன் டில்லியிலோ அல்லது ராஞ்சியிலோ இல்லாததால் 30 மணி நேரத்துக்கும் மேலாக அவரைக் காணவில்லை என்று ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவர்கள் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர். ஹேமந்த் சோரனின் டில்லி இல்லத்தில் இருந்து, ரூ.36 லட்சம் பணம் மற்றும் சொகுசு கார் உள்ளிட்டவற்றை அமலாக்கத்துறை பறிமுதல் செய்திருந்தது. இந்நிலையில், ஜார்க்கண்ட்டில் உள்ள இல்லத்தில் வைத்து ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் 6 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். இதன் பின்னர், அமலாக்கத் துறை அதிகாரிகள் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா மற்றும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் உடன், ஹேமந்த் சோரன் அம்மாநில ஆளுநர் இல்லத்துக்கு சென்றனர். பின்னர், தனது ராஜினாமா கடிதத்தை ஹேமந்த் சோரன் வழங்கினார். இதனைத் தொடர்ந்து, அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். முன்னதாக, அம்மாநில எம்எல்ஏக்களைச் சந்திப்பதற்கு அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று நேரம் ஒதுக்கியிருந்தார். ஹேமந்த் சோரன் ராஜிநாமாவைத் தொடர்ந்து, அக்கட்சியைச் சேர்ந்த சம்பாய் சோரன் புதிய முதல்வராக தேர்வு செய்துள்ளதாக அக்கட்சியின் எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர். சம்பாய் சோரன், ஜார்க்கண்ட் மாநில அரசின் போக்குவரத்து துறை, பழங்குடியின மற்றும் பட்டியலின அமைச்சராக இருப்பவர். ஹேமந்த் சோரனின் தீவிர விசுவாசி என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!