தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் இன்று நடைபெற்றது. மாநில தலைவர் பூ.விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர். இதில் வரும் தேர்தலில் எந்தக் கட்சிக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் விவசாயிகளின் நலன் காக்க 10 முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பூ.விஸ்வநாதன் கூறுகையில்:–
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து முடிவு செய்யும் அதிகாரத்தை மாநிலத் தலைவருக்கு பொதுக்குழு வழங்கியுள்ளது. நாங்கள் எந்த கட்சிக்கு ஆதரவளிப்போம் என்பதை வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி அதிகாரபூர்வமாக அறிவிப்போம்.
எங்களது முக்கிய கோரிக்கைகளான கூட்டுறவு சங்கங்கள் மற்றும்
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய அனைத்து விவசாயக் கடன்களையும் அரசு தள்ளுபடி செய்ய வேண்டும், நெல் குவிண்டாலுக்கு ₹3,000, கரும்புக்கு ₹4,000, பருத்திக்கு ₹12,000 மற்றும் மக்காச்சோளத்திற்கு ₹3,000 என மத்திய, மாநில அரசுகள் குறைந்தபட்ச ஆதார விலையை அறிவிக்க வேண்டும். மேலும், டிராக்டர், பவர் டிரில்லர் போன்ற விவசாயக் கருவிகளுக்கு GST மற்றும் SGST வரியிலிருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும். உரங்கள் மற்றும் இடுபொருட்களுக்கு மானியம் வழங்குவதற்குப் பதிலாக, அண்டை மாநிலங்களைப் போல விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பணத்தை வழங்க வேண்டும். காவிரி, கொள்ளிடம், பாலாறு உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய ஆறுகளில் தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும். ஏரி, குளம் மற்றும் கண்மாய்களைத் தூர்வாரி நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், திமுக ஆட்சியில் நாங்கள் வலியுறுத்திய கோரிக்கைகளில் 60 சதவீதம் நிறைவேற்றி உள்ளனர். விவசாயிகளுக்கான தனி பட்ஜெட்டை அறிவித்துள்ளனர்.
அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கான தனிபட்சத்தை அவர்கள் அறிவிக்கவில்லை என தெரிவித்தார்.
