அதிமுக பொதுக்குழு கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி சென்னை வானகரத்தில் நடந்தது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டார். இந்த முடிவுகள் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக தகவல் தெரிவித்தது. ஆனாலும் தேர்தல் ஆணையம் அதை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தது.
இந்த நிலையில் அ.தி.மு.க.வில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும் என்டில்லி ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த டில்லி ஐகோர்ட்டு, 10 நாட்களில் முடிவெடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. இந்த அவகாசம் வருகிற 22 ந்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஆனூப் சந்திர பாண்டே, ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
அதே நேரத்தில் ஓபிஎஸ் தரப்பினர், எடப்பாடியை பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கூடாது என மனு தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று தனது முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதில் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்தது. கர்நாடகத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க வேண்டும். ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தீர்மானங்களில் ஒன்று ஓபிஎஸ் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாகும். அதையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு விட்டது. எனவே இனி ஓபிஎஸ் தரப்பினர் தங்களை அதிமுக என சொல்லிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து சட்டமன்றத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் இருந்த எடப்பாடிக்கு அதிமுகவினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையால் ஓபிஎஸ் தரப்பின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.