Skip to content
Home » சிறுவன் கூறியதை கேட்டு ஆத்திரம்…. பள்ளிக்குள் புகுந்து எச்.எம்., ஆசிரியருக்கு அடி உதை.. வீடியோ..

சிறுவன் கூறியதை கேட்டு ஆத்திரம்…. பள்ளிக்குள் புகுந்து எச்.எம்., ஆசிரியருக்கு அடி உதை.. வீடியோ..

குறிப்பு…. வீடியோவில் பதிவான சத்தங்கள் எடிட் செய்யப்படவில்லை..

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கீழநம்பிபுரத்தில் அரசு உதவிபெறும் இந்து தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு குருவம்மாள் (56) என்பவர் தலைமை ஆசிரியையாகவும், பாரத் (40) என்பவர் ஆசிரியராகவும் உள்ளனர். இந்த பள்ளிக்கூடத்தில் 20-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம்-செல்வி தம்பதியின் மகன் பிரதீஷ் 2-ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆசிரியர் பாரத், சிறுவன் பிரதீசுக்கு வீட்டுப்பாடம் கொடுத்துள்ளார். ஆனால் வீட்டுப்பாடத்தை வீட்டில் உள்ளவர்கள் எழுதிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாரத், சிறுவனை சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து அன்றைய தினமே பிரதீஷின் தாத்தா முனியசாமி பள்ளிக்கூடத்திற்கு சென்று வாக்குவாதம் செய்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் சிறுவன் பிரதீஷ் விளையாடும் போது கீழே விழுந்து தலையில் அடிப்பட்டுள்ளது. ஏன் தலையில் காயம் என கேட்டதற்கு அவன் ஆசிரியர் பாரத் அடித்து விட்டதாக கூறியுள்ளான்.

இதுதொடர்பாக கேட்பதற்காக முனியசாமி, சிவலிங்கம், செல்வி ஆகியோர் நேற்று மதியம் சுமார் 12 மணியளவில் பள்ளிக்கூடத்திற்கு சென்றனர். அங்கிருந்த ஆசிரியர் பாரத்திடம், என் குழந்தையை ஏன் அடித்தீர்கள் என்று கூறி தகராறு செய்தனர். பின்னர் அவரையும், அங்கு வந்த தலைமை ஆசிரியை குருவம்மாளையும் அவர்கள் ஓட, ஓட விரட்டி செருப்பால் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. மேலும் பள்ளியில் இருந்த நாற்காலிகளை சேதப்படுத்தி மிரட்டல் விடுத்து சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்த அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் எட்டயபுரம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரையும் கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து தலைமை ஆசிரியை குருவம்மாள் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு, முனியசாமி, சிவலிங்கம், செல்வி ஆகிய 3 பேரை அதிரடியாக கைது செய்தனர். இதற்கிடையே பள்ளிக்கூடத்தில் புகுந்து தலைமை ஆசிரியை, ஆசிரியரை தாக்கும் காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!