Skip to content
Home » அதிகனமழை.. 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை, தேர்வுகள் ஒத்திவைப்பு…

அதிகனமழை.. 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை, தேர்வுகள் ஒத்திவைப்பு…

அதிகனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (18-12-2023) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கபட்டுள்ளது. அதேபோல் தேனி,  ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். இதனிடையே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வுகள் கடந்த 13-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இன்று விடுமுறை விடப்பட்டு இருப்பதால், இந்த மாவட்டங்களில் 6 முதல் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு நடக்க இருந்த கணிதம் பாடத் தேர்வும், பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண் உயிரியல் உள்ளிட்ட சில பாடங்களுக்கான தேர்வும், 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட இருந்த கணிதம் பாடத் தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே மாநில அளவில் ஒரே மாதிரியான வினாத்தாள் என்ற அடிப்படையில் அரையாண்டு தேர்வு நடைபெறும் நிலையில், ரத்து செய்யப்பட்ட இந்த 6 மாவட்டங்களில் மற்றொரு நாளில் தேர்வு நடத்தப்படும். அதுதொடர்பான அறிவிப்பை பள்ளிக்கல்வித் துறை வெளியிடும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல், அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மட்டும் ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!