Skip to content
Home » ரூ.1 சில்லறை தராத கண்டக்டர்..ரூ.2 ஆயிரம் அபராதம்

ரூ.1 சில்லறை தராத கண்டக்டர்..ரூ.2 ஆயிரம் அபராதம்

கடந்த 2002-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படம் குடிமக்களின் அடிப்படை சட்டங்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய படமாக அமைந்திருந்தது. அந்த படத்தில் ஒரு காட்சியில் பஸ்சில் பயணம் செய்யும் பயணி ஒருவருக்கு மீதி சில்லறையை தராமல் நடத்துனர் அலட்சியம் செய்வார். மேலும் தகாத வார்த்தைகளால் திட்டுவார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நபர் வக்கீல் உதவியுடன் அந்த நடத்துனர் மீது வழக்கு தொடர்ந்து நஷ்ட ஈடு கோரப்படும். அதேபோன்ற ஒரு சம்பவம் தான் தற்போது பெங்களூரு பகுதியில் நடந்துள்ளது. பஸ்சில் ரூ.1 சில்லறை தர மறுத்ததால் பெங்களூரு நுகர்வோர் நீதிமன்றம், பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகத்தை(பிஎம்டிசி) பாதிக்கப்பட்டவருக்கு ரூ.2,000 இழப்பீடு வழங்க  உத்தரவிட்டுள்ளது.

பெங்களூருவை சேர்ந்த ரமேஷ் நாயக் என்பவர் இது தொடர்பான மனுவை நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். கடந்த 2019-ம் ஆண்டில், ரமேஷ் நாயக் என்பவர் பிஎம்டிசி பஸ்சில் சாந்திநகர் பகுதியிலிருந்து மெஜஸ்டிக் பகுதிக்கு பயணம் செய்து உள்ளார். அப்போது பணியில் இருந்த நடத்துனர் ரூ.29 டிக்கெட்டை வழங்கினார், அப்போது ரமேஷ் நாயக் பஸ் நடத்துனருக்கு ரூ.30 கொடுத்தார். ஆனால் நடத்துனர் ரமேஷுக்கு மீதம் 1 ரூபாய் பாக்கியை கொடுக்கவில்லை. பஸ் நடத்துனரின் செயலால் பாதிக்கப்பட்ட நாயக் ரூ.15,000 இழப்பீடு கோரி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

பஸ்சில் தன்னிடம் நடத்துனர் அநாகரிகமாக நடந்துகொண்டதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.  ரமேஷ் நாயக்கின் குறைகளைக் கருத்தில் கொண்ட பெங்களூரு நகர்ப்புற நுகர்வோர் தீர்வு ஆணையம், நீதிமன்றக் கட்டணமாக ரூ. 1,000 உடன் பகுதி நிவாரணமாக ரூ. 2,000 செலுத்துமாறு பிஎம்டிசிக்கு உத்தரவிட்டது. இந்த விவகாரம் கொண்டு வரப்பட்டபோது, இது ஒரு அற்பமான பிரச்சினை என்று பிடிசிடிசி எதிர் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது. பிஎம்டிசி தனது தரப்பில் சேவையில் குறைபாடு இல்லை என்றும், எனவே புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இருப்பினும் ரமேஷ் நாயக் தலைமை தேர்வு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தார். பின்னர் நீதிமன்றம் இது நிறுவனத்திற்கு அற்பமான பிரச்சனையாக இருக்கலாம் ஆனால் உரிமையாளருக்கு இது உரிமை பிரச்சினை, எனவே அவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி இந்த தொகையை 45 நாட்களுக்குள் செலுத்துமாறு பிஎம்டிசிசிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது, தவறினால் ஆண்டுக்கு ரூ.6,000 வரை வட்டி செலுத்த வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!