Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் பிரபல ரவுடி கொலை வழக்கில்… 5 பேர் கைது

திருச்சியில் அரியமங்கலம் பகுதியில் பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் – 5 பேர் கைது.

திருச்சி மாநகர் பகுதிக்கு உட்பட்ட அரியமங்கலம் அம்மாகுளம் பகுதியை சேர்ந்தவர் பாதுஷா (24). பிரபல ரவுடியான இவர் மீது 15 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த 6 ஆம் தேதி, காட்டூர் வினோபாஜி தெரு பகுதியில் பாதுஷா சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திருவெறும்பூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் கொலை குற்றவாளிகளை கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

போலீஸ் விசாரணையில், பாதுஷாவுக்கும் மேலஅம்பிகாபுரத்தைச் சேர்ந்த சூர்யா என்பவரின் அக்காவிற்கு இடையே நீண்டகாலமாக தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த செப்டம்பர் 2025-ல் சூர்யா மற்றும் அவரது நண்பர் தீபக் ஆகியோர் பாதுஷாவை தாக்கியதில், அவரது வலது கையில் இரண்டு விரல்கள் துண்டிக்கப்பட்டதாகவும், அதுகுறித்து ஏற்கனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், தனிப்படை போலீசார் மேற்கொண்ட தீவிர தேடுதல் நடவடிக்கையில் அரியமங்கலத்தை சேர்ந்த சூர்யா (22), சுதந்திர குமார் (26), பிரசாந்த் (29), தீபக் (20) மற்றும் மணிகண்டன் (25) ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். மேலும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட சூர்யாவிடம் நடத்திய விசாரணையில், தனது அக்காவுடன் பாதுஷா தொடர்ந்து தொடர்பில் இருந்ததால் ஆத்திரமடைந்து நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

error: Content is protected !!