“கோவையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை அசைக்க முடியாத பலத்துடன் உறுதி செய்யும் நோக்கில், மாநகரக் காவல் ஆணையரின் உத்தரவின் பேரில், பிரத்யேகமாக அமைக்கப்பட்ட காவல் துறையின் ‘சிங்கப்பெண்கள்’ அதிரடிப் படையினர் மாநகரின் முக்கியப் பேருந்துகள், பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுப் பூங்காக்களில் நேரடியாகக் களமிறங்கிப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகளை வழங்கி அதிரடி ஆக்ஷனில் ஈடுபட்டு உள்ளனர்.”
கோவையின் சட்டம் – ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்துக் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலும், கோவையின் பாதுகாப்பை கொண்டு செல்லும் வகையிலும், கோவை மாநகர காவல் துறையின் பெண் போலீசாரைக் கொண்ட இந்தச்
‘சிங்கப்பெண்கள்’ சிறப்புப் படை தற்பொழுது கோவையின் வீதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம், உக்கடம், சிங்காநல்லூர் மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் சிங்கப்பெண்கள் படையினர், கூட்டம் அதிகமாகக் காணப்படும் நகரப் பேருந்துகளுக்குள் ஏறி பேருந்துகளில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண் தொழிலாளர்களிடம் பேசிய பெண் போலீசார், “பயணங்களின் போது ஏதேனும் ‘நெகட்டிவ்’ சீண்டல்களோ அல்லது அச்சுறுத்தல்களோ ஏற்பட்டால் அஞ்சுவதைத் தவிர்த்து, உடனடியாகக் காவல் துறையின் அவசர உதவி எண்களைத் தொடர்பு கொள்ள வேண்டும்” என்று தைரியம் ஊட்டினர். மேலும் பெண்களுக்கு ஆபத்து காலங்களில் உதவும் ‘காவலன் SOS’ செயலியின் பயன்பாடுகள் குறித்தும், கோவை மாநகர போலீசாரின் பிரத்யேக எண்கள் கூறிய அறிவுரை வழங்கினர்.
பேருந்து நிலையங்களைத் தொடர்ந்து, மாலை வேளையில் கோவையின் முக்கிய அடையாளங்களான உக்கடம் பெரியகுளம் ஐ லவ் யூ கோயமுத்தூர் செல்பி ஸ்பாட் போன்ற பொதுமக்கள், அதிகம் கூடும் இடங்களில் இந்தச் ‘சிங்கப்பெண்கள்’ ஸ்குவாட் விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டது.
பூங்காவிற்கு வரும் இளம் பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமிகளுடன் வந்து இருந்த பெற்றோர்களை நேரில் சந்தித்துப் பேசிய பெண் போலீசார், தற்போதைய ‘Drugs Culture’ அச்சுறுத்தல்கள் குறித்தும், அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து தங்களது பிள்ளைகளை எப்படி பாதுகாப்பாக வைத்து இருக்க வேண்டும் என்பது குறித்தும் விரிவான விழிப்புணர்வு ஆலோசனைகளை வழங்கினர்.
