கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பிள்ளாபாளையம் பகுதியில் மாரியாயி என்பவரின் 1.5 ஏக்கர் விவசாய நிலத்தில் மகிளிப்பட்டியைச் சேர்ந்த முருகானந்தம் (40) என்பவர் 5 வருடங்களாக குத்தகைக்கு விவசாயம் செய்து வருகின்றார். தற்போது நிலத்தில் விளைவித்த பீர்க்கங்காய் செடிகளுக்கு பூச்சி கொல்லி மருந்து அடித்ததாக தெரிகிறது. அதன் பிறகு வீட்டிற்குச் சென்ற முருகானந்தம் மீண்டும் வயலில் வந்து பார்த்தபோது மயில்கள் இறந்து கிடப்பதை பார்த்துள்ளார் இதனையடுத்து பிள்ளபாளையம் விஏஓ முரளிக்கு தகவல் அளித்துள்ளார். அதன் பிறகு தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த வனவர் சாமியப்பன், வனக்காப்பாளர் சிவரஞ்சனி, லாலாபேட்டை போலீசார் மற்றும் விஏஓ முன்னிலையில் வயல் வெளிகளில் இறந்து கிடந்த 8 மயில்களை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர். 