Skip to content
Home » திருச்சி ஊழியர் வழக்கு…….வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு ஐகோர்ட்டில் ஆஜர்

திருச்சி ஊழியர் வழக்கு…….வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு ஐகோர்ட்டில் ஆஜர்

  • by Senthil

திருச்சியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் வனத்துறையில் காவலராக பணியாற்றி வந்தார். அவர் தனக்கு பதவி உயர்வு வழங்கக் கோரி கடந்த 2014 ம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இதில் சம்பந்தப்பட்ட மனுதாரரின் மனுவை பரிசீலித்து பதவி உயர்வு வழங்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.  இதையடுத்து நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை எனக்கூறி மதுரை ஐகோர்ட்டில் 2017 ம் ஆண்டு கருப்பையா நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு பல காலமாக விசாரணையில் இருந்து வந்தது. இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி, நீதிமன்ற உத்தரவை பல ஆண்டுகளாக நிறைவேற்றாதது குறித்து விளக்கமளிக்க வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு மதுரை ஐகோர்ட்டில் இன்று ஆஜரானார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி பட்டு தேவானந்த், “கல்வித் துறைக்கு அடுத்தபடியாக வனத்துறை சார்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் அதிகளவில் தாக்கல் செய்யப்படுகின்றன. நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் அதிகாரிகளை வரவழைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல.  பணியாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே நோக்கம். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்கு பல ஆண்டுகள் ஏன் தாமதமாகிறது?. நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை அதிகாரிகள் முறையாக நிறைவேற்றினாலே அவமதிப்பு வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துவிடும்” என தெரிவித்தார். தொடர்ந்து இந்த வழக்கில் உத்தரவுகள் நிறைவேற்றப்பட்டதாக ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாகு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து நீதிபதி பட்டு தேவானந்த் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!