கோவை காந்தி பார்க் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஆர்.எஸ்.புரம் டி.பி. சாலை பகுதிகளில், நேரு வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த 4 மாணவர்கள் பள்ளி சீருடையில் ஒரே பைக்கில் ஆபத்தான முறையில் சாகசப் பயணம் மேற்கொண்டுள்ளனர். சாலையின் இருபுறமும் வாகனங்களை வளைத்து வளைத்து அவர்கள் ஓட்டியதால், சக வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் அச்சமடைந்தனர்.
இவர்களின் பின்னால் காரில் வந்த ஒருவர், மாணவர்களின் இந்த ஆபத்தான செயலைத் தனது மொபைலில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது சில நிமிடங்களிலேயே வைரலானது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் மாணவர்களின் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவிப்பதோடு, இவர்களின் பெற்றோரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மைனர் குழந்தைகள் இதுபோன்று வாகனங்களை இயக்கினால் பெற்றோர்களுக்குக் கடுமையான அபராதமும், சிறை தண்டனையும் விதிக்கப்படும் எனப் போலீசார் தொடர்ந்து எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
