இந்தியா நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கியதையடுத்து முதல் கட்டமாக தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் தேர்தல் கமிஷன் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் இன்று சிதம்பரம் தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சி தலைவருமான ஆனி மேரி ஸ்வர்ணா பொது மக்களின் வீடுகளுக்கு வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களில் தேர்தல் விழிப்புணர்வு வில்லைகளை ஓட்டினர். பின்னர் அவர் கூறுகையில், அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு சிலிண்டர் ஏஜென்சிகள் மூலமாக சுமார் ஒரு லட்சம் சிலிண்டர்கள் ஒரு மாதத்திற்கு விநியோகம் செய்யப்படுகிறது. அந்த சிலிண்டர்கள்
அனைத்திலும் பொதுமக்கள் 100% வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய வில்லைகள் ஓட்டும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து வீடுகளிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் டெலிவரி செய்யப்படும் பொழுது, சமையல் அறையில் பொதுமக்களுக்கு வாக்கு பதிவு செய்ய வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படும் என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் அரியலூர் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுருளிராஜன், அரியலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம், அரியலூர் வட்டாட்சியர் ஆனந்தவேல், அனுப்பா கேஸ் ஏஜென்சி உரிமையாளர் அனுராதா பார்த்தசாரதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.