Skip to content
Home » வேளாங்கண்ணியில் இன்று புனித வெள்ளி வழிபாடு….. பக்தர்கள் குவிந்தனர்.

வேளாங்கண்ணியில் இன்று புனித வெள்ளி வழிபாடு….. பக்தர்கள் குவிந்தனர்.

உலக மக்களின் பாவங்களை போக்க 40 நாட்கள் உபவாசம் இருந்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த இயேசுவின் பாடுகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை கடைப்பிடித்து வருகிறார்கள். இயேசு சிலுவையில் உயிர்தியாகம் செய்த நாள் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. உயிர்த்தெழுந்தநாள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தவக்காலத்தின் இறுதி வாரத்தின் தொடக்கமாக கடந்த 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது. தாழ்மை, எளிமை, அன்பு  உருவேயான இயேசு தம்முடைய சீடர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டு, ‘நான் உங்களில் அன்பாய் இருப்பது போல நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பாய் இருங்கள்’ என்று போதித்து அவர்களுடன் உணவருந்தினர். இதனை லாஸ்ட் சப்பர்,  கடைசி ராப்போஜனம் என்பார்கள்.. அன்றைய நாள் பெரிய வியாழனாக நேற்று அனுசரிக்கப்பட்டது.

இன்று (வெள்ளிக்கிழமை)  அனைத்து பேராலயத்தில் புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி, சிலுவைப்பாதை நிகழ்ச்சியில் கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள உலகப்பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் இன்று  மாலை 5.30 மணிக்கு இறைவார்த்தை வழிபாடு, திருச்சிலுவை ஆராதனை, சிலுவையை முத்தி செய்தல், திவ்ய நற்கருணை, சிலுவைப்பாதை இயேசுவின் திருவுருவத்தை சிலுவையில் இருந்து எடுத்து பேராலய கீழ் கோவிலுக்கு பவனியாக எடுத்துச் செல்லுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. வருகிற 31-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!