Skip to content
Home » அரசு மாணவர் விடுதி சமையலர்களுக்கு பெரம்பலூர் கலெக்டர் அறிவுரை…

அரசு மாணவர் விடுதி சமையலர்களுக்கு பெரம்பலூர் கலெக்டர் அறிவுரை…

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம் வ.களத்தூரில் உள்ள ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதிகளை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, விடுதியில் மாணவர்கள் தங்கும் அறைகள், உணவுக்கூடம், சமையலறை, குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விடுதிகளில் தற்போது உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தது போல உணவுப் பொருட்கள் தேவையான அளவில் உள்ளதா என்பது குறித்தும், அரசின் மூலம் விடுதி மாணவர்களுக்கு வழங்கப்படும் திட்டங்கள் முறையாக சென்று சேருகிறதா என்பது குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.

விடுதியில் உள்ள பதிவேடுகளையும் பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மாணவர்களுக்கு உணவு சமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்களின் தரம் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த அரிசியை எடுத்து அந்த அரிசியில் வெண்மை நிறத்தில் சில அரிசிகள் கலந்திருப்பதை சுட்டிக்காட்டி இந்த இது போன்ற அரிசிகளை என்ன செய்கிறீர்கள் என்று சமையலரிடம் கேட்டார். அதற்கு அரிசியை கழுவும் போது இது போன்ற வெண்மை நிற அரிசிகள் மேலே மிதக்கும் அந்த அரிசிகளை நீக்கிவிட்டு மற்ற அரிசிகளை சமைப்பதற்கு பயன்படுத்துகிறோம் என்று தெரிவித்தனர். இதைக் கேட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அரசின் மூலம் மிகவும் தரமான அரிசி தங்களுக்கு வழங்கப்படுகிறது. அப்படிப்பட்ட தரமான அரிசியில் இதுபோன்ற வெள்ளை நிற அரிசிகள் கிடப்பது ஏன் என்று உங்களுக்கு கேள்வி எழவில்லையா?

அரிசியினை கழுவும்போது தண்ணீரில் மிதக்கின்றது என்ற காரணத்திற்காக அந்த அரிசிகளை துாக்கி எறியாதீர்கள். அந்த அரிசிகள் தான் செறிவூட்டப்பட்ட சத்தான அரிசிகள்.
இந்த செறிவூட்டப்பட்ட அரிசியினை சாப்பிடுவதால் இரத்த சோகை தடுக்கப்படுகின்றது. இந்த அரிசியில் உள்ள போலிக் அமிலம், கருவளர்ச்சிக்கும் இரத்த உற்பத்திக்கும், வைட்டமின் பி12 நரம்பு மண்டலத்தின் இயல்பான வளர்ச்சிக்கும் பெரிதும் உதவியாக இருக்கும். மாணவ மாணவிகளின் உடல் ஆரோக்கியத்திற்காக

அரசாங்கத்தால் இந்த அரிசி வழங்கப்படுகின்றது. பொதுமக்களின் நலன் கருதி நியாய விலைக்கடைகளிலும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகின்றது. இந்த சத்து மிகுந்த அரிசி தண்ணீரில் மிதக்கும் தன்மை கொண்டது. தண்ணீரில் மிதக்கிறது என்ற காரணத்தால் துாக்கி எறிந்து விடாதீர்கள்.
என தெரிவித்தார்.

மேலும் நியாய விலைக் கடைகளிலும், அரசு மாணவர் விடுதிகளிலும் பயன்படுத்தப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து பொதுமக்களுக்கும், மாணவ மாணவிகளுக்கும் சமையலர்கள், விடுதி காப்பாளர்களுக்கும்போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ராமலிங்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!