கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் கொயிலாண்டி அருகே உள்ள பாரக்கல் தாழே பகுதியைச் சேர்ந்தவர் சுதா (45). இவர் தனது வீட்டின் அருகே உள்ள ஒரு பகுதியில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது உடலின் அருகே ரத்தக்கறை படிந்த அரிவாள் ஒன்று கிடந்தது. தகவலறிந்து வந்த கொயிலாண்டி போலீசார், சுதாவின் உடலைக் கைப்பற்றிக் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சுதாவிற்கும் அவரது கணவர் கிருஷ்ணன் குட்டிக்கும் இடையே வீட்டில் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. கொலைச் சம்பவத்திற்குப் பிறகு கிருஷ்ணன் குட்டி தலைமறைவாக உள்ளதால், அவரே மனைவியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்திருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர். சம்பவ இடத்திற்குத் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில், தப்பியோடிய கணவரைப் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
