சேலம் மாவட்டம், ஆத்தூர் தம்மம்பட்டி அருகேயுள்ள நாகியம்பட்டி ஆண்டிக்காட்டைச் சேர்ந்தவர் மருதை(எ) ஊசி(60). கூலித்தொழிலாளி. இவரது மகள் தனலட்சுமியை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு உலிபுரம் புங்கமரத்துக்காட்டைச் சேர்ந்த சரவணன்(40) என்பவருக்கு திருமணம் செய்துகொடுத்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
குடிபழக்கம் கொண்ட சரவணன், மனைவி மீது சந்தேகம் அடைந்து அவரை அடித்து கொடுமைப்படுத்தி வந்தார். நேற்று முன்தினமும் குடித்துவிட்டு வந்த சரவணன் மனைவியை அடித்துள்ளார். இதனால் கணவரிடம் கோபித்து கொண்டு தனலட்சுமி பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார்.
இதனால் மனைவியை அழைத்து செல்ல சரவணன் குடிபோதையில் இரவு 10 மணிக்கு வந்துள்ளார். அப்போதும் தகராறில் ஈடுபட்டதுடன் மனைவியை தன்னுடன் அனுப்புமாறு கூறியுள்ளார்.
“தினமும் குடித்துவிட்டு வந்து அடித்து கொடுமைப்படுத்துவாய்” எனக் கூறிய மாமனார் மருதை, தனது மகளை அவருடன் அனுப்ப முடியாது என கூறியுள்ளார். மேலும் கோபத்தில் அங்கிருந்த குச்சியை எடுத்து மருமகனை அடித்து விரட்டியுள்ளார். இதனால் கடும் கோபம் அடைந்த சரவணன், மாமனாரை கல்லால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றார்.
இதில் பலத்த காயம் அடைந்த மருதை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தம்மம்பட்டி போலீசார் மருதை உடலை மீட்டு தலைமறைவான சரவணனை தேடிவந்தனர். இந்நிலையில அவர் கேரளா தப்பி சென்றது தெரியவந்தது. அவரது செல்போன் சிக்னலை வைத்து விசாரணை நடத்தி, சரவணனை போலீசார் பிடித்தனர். என் மனைவியை அனுப்ப மாட்டேன் என கூறியதுடன், குச்சியால் அடித்தார். அந்த கோபத்தில் அவரை கல்லால் தாக்கிக் கொலை செய்ததாக போலீசாரிடம் சரவணன் கூறியுள்ளார். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.