Skip to content

தமிழ்நாட்டின் 2வது தலைநகரம் திருச்சி? கனிமொழியிடம் நேரு, மகேஸ் மனு

தமிழகத்தின் நிர்வாகச் சுமையை குறைக்கும் நோக்கில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் M. G. எம்.ஜி.ஆர் தனது ஆட்சிக் காலத்திலேயே திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்கு எண்ணத்தை முன் வைத்ததாக அரசியல் வட்டாரங்களில் குறிப்பிடப்படுகிறது. சென்னையில் அதிகரித்து வரும் மக்கள் தொகை, கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் ஒரே நகரத்தில் குவியும் நிர்வாக அழுத்தங்களை கருத்தில் கொண்டு, அரசுத் துறை செயல்பாடுகளைப் பகிர்ந்து செயல்படுத்த வேண்டும் என்பதே அந்த யோசனையின் மையமாக இருந்தது.

தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருச்சி, மாநிலத்தின் எந்த மாவட்டத்திலிருந்தும் குறுகிய நேரத்தில் அடையக்கூடிய நகரமாக இருப்பதால், நிர்வாக மையமாக உருவாக்க மிகவும் பொருத்தமான இடம் என எம்.ஜி.ஆர் கருதியதாக சொல்லப்படுகிறது. ஆனால், அவரது உடல்நிலை பாதிப்புகள் காரணமாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்த முடியாமல் போனது.
கனிமொழியிடம் மனு
பல ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த பழைய யோசனை தற்போது மீண்டும் அரசியல் கவனத்தின் மையமாக வந்துள்ளது. சமீபத்தில் திருச்சியில் உள்ள Jamal Mohamed College-ல் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உள்ளடக்கிய மனு, திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவர் கனிமொழியிடம் வழங்கப்பட்டது. இந்த மனுவை அமைச்சர்கள் K. N. நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது பேசிய அமைச்சர்கள், திருச்சி தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமாக இருப்பதாலும், நிர்வாக ரீதியாக அனைத்து மாவட்டங்களுக்கும் எளிதில் அணுகக்கூடிய இடமாக திகழ்வதாலும், இரண்டாவது தலைநகருக்கான தகுதி பெற்ற நகரமாக திருச்சி பார்க்கப்படுவதாக தெரிவித்தனர். மேலும், சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை, போக்குவரத்து நெரிசல் மற்றும் நிர்வாகச் சுமை ஆகியவை, நிர்வாக செயல்பாடுகளைப் பகிர்ந்து செயல்படுத்த வேண்டிய அவசியத்தை உருவாக்கியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெறுமா?
இதனிடையே, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தனது தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் பணிகளை தொடங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் பொதுமக்கள், சமூக அமைப்புகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடமிருந்து கோரிக்கைகள் மற்றும் மனுக்களை சேகரித்து வரும் நிலையில், “திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும்” என்ற கோரிக்கை முக்கியமான பொதுமக்கள் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டுள்ளது. இது உடனடி அரசு அறிவிப்பாக இல்லாவிட்டாலும், மக்கள் தரப்பிலிருந்து எழும் அழுத்தம் மற்றும் நிர்வாக தேவைகளை கருத்தில் கொண்டு, இந்த யோசனை திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

error: Content is protected !!