திருச்சி . சென்னை, கோவை , ஹைதராபாத் உள்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை முதல் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50- க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு தொடர்பாக வந்த புகாரையடுத்து இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஜி ஸ்கொயர் தலைமை அலுவலகத்திற்கு வருமான வரி அதிகாரிகள் வந்தனர். ஆனால் அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால் காத்திருந்து அதன்பிறகு சோதனையைத் தொடர்ந்தனர். மேலும், நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடக்கிறது.
இதுபோல திருச்சி ஒத்தக்கடையில் உள்ள ஜி. ஸ்கொயர் நிறுவனத்திலும் இன்று காலை வருமானவரித்துறை அதிகாரிகள் வந்தனர். ஒரு பெண் அதிகாரி தலைமையில் அவர்கள் வந்திருந்தனர். ஜி.ஸ்கொயர் அலுவலகம் பூட்டிக்கிடந்ததால் அந்த அதிகாரிகள் அலுவலகத்தின் முன் அமர்ந்திருந்தனர். பின்னர் அலுவலக ஊழியர்கள் வந்து அலுவலகத்தை திறந்தனர். அதைத் தொடர்ந்து சோதனை தொடங்கியது. சோதனை நடைபெறும் இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படை குவிக்கப்பட்டுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜி ஸ்கொயர் அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். மூன்று வாகனங்களில் வந்த பத்துக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஐதராபாத்திலும் 13 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.