Skip to content
Home » மன்னிப்பு கேள்……..நடிகர் இளவரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

மன்னிப்பு கேள்……..நடிகர் இளவரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

  • by Senthil

தென்னிந்திய திரைப்படஒளிப்பதிவாளர் சங்கம் கடந்த 2018-ம் ஆண்டு சங்கத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக திநகர் காவல் நிலையத்தில் நிதி முறைகேடு தொடர்பாக புகார் அளித்தது. புகார் தொடர்பான விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனக்கூறி, கடந்த 2022-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் , விசாரணையை விரைவாக முடித்து, இறுதி அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நான்கு மாதத்துக்குள் தாக்கல் செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தது.

ஆனால் குறிப்பிட்ட காலத்துக்குள் போலீஸார் விசாரணையை முடிக்கவில்லை எனக்கூறி ஒளிப்பதிவாளர் சங்கம் சார்பில் அதன் செயலாளரும் நடிகருமான இளவரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த அவமதிப்பு வழக்கு கடந்த டிசம்பர் மாதம் நீதிபதி ஜெகதீஷ் சந்திராவிடம் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “வழக்கின் விசாரணை முடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் டிசம்பர் 13-ம் தேதி இறுதி அறிக்கை தாக்கல் செய்யபட்டுவிட்டது” என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு மீண்டும் நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு கடந்த வாரம்   விசாரணைக்கு வந்தது. அப்போது, குறிப்பிட்ட தேதியில் நடிகர் இளவரசு எங்கு இருந்தார்? என்பதற்கான மொபைல் லோகேஷன் விவரங்களையும், சிடிஆர் என்று சொல்லக்கூடிய மொபைல் அழைப்பு விவரங்களையும் ஜனவரி 29-ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

அதன்படி இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி  ஜெகதீஷ்சந்திரா, கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்து இளவரசு மன்னிப்பு  கேட்டால் ஏற்றுக்கொள்கிறோம். இல்லாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறினார். இதனால் இந்த வழக்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!