Skip to content
Home » மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் …சோதனை ஓட்டம்…21ம் தேதி நடைபெறும்

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் …சோதனை ஓட்டம்…21ம் தேதி நடைபெறும்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), விண்வெளி ஆராய்ச்சியில் அடுத்தடுத்த சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. சந்திரயான்-3 விண்கலத்தின் மூலம் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவற்றை நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கி இஸ்ரோ சரித்திரம் படைத்தது. அதைத்தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா எல்-1 விண்கலத்தை விண்ணில் நிலை நிறுத்தி உள்ளது. இந்த உத்வேகத்துடன், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்ட செயல்பாடுகளை இஸ்ரோ துரிதப்படுத்தி உள்ளது.

பூமியின் தாழ்வு வட்டபாதையில் 400 கி.மீ. உயரத்தில் ககன்யான் விண்கலம் நிலை நிறுத்தப்பட்டு, 3 நாட்கள் ஆய்வு பணிகள் மேற்கொள்ளும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. விண்வெளிக்கு மனிதர்களை பாதுகாப்பாக அழைத்து சென்று, மீண்டும் அவர்களை பூமிக்கு பத்திரமாக அழைத்து வருவதற்கு ‘க்ரூ மாட்யூல்’ (குழு தொகுப்பு) கட்டமைப்பு அவசியம். இதற்கான சோதனைகளுக்காக, சென்னையில் உள்ள கே.சி.பி. நிறுவனத்திடம் ‘க்ரூ மாட்யூல்’ மாதிரிகள் வடிவமைக்க இஸ்ரோ அறிவுறுத்தியது.

அதன்படி, 2 ‘க்ரூ மாட்யூல்’கள் வடிவமைக்கப்பட்டு, இஸ்ரோவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் 3 விண்வௌி வீரர்கள் அமருவதற்கான வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ககன்யான் திட்ட சோதனைகளுக்காக ஒற்றை நிலை கொண்ட ‘டிவி-டி1’ என்ற சோதனை ராக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ‘க்ரூ மாட்யூல்’ கட்டமைப்பு பொருத்தப்பட்டு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்படும். பூமியில் இருந்து 17 கி.மீ. உயரத்துக்கு ராக்கெட் சென்றதும், ‘க்ரூ மாட்யூல்’ பிரிக்கப்படும்.

பூமியை நோக்கி க்ரூ மாட்யூல் வரும்போது, அதன் வேகத்தை குறைக்க பாராசூட் பயன்படுத்தப்படும். அதனால், மிதமான வேகத்தில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 கி.மீட்டர் தூரத்தில் வங்கக்கடல் பகுதியில் ‘க்ரு மாட்யூல்’ பத்திரமாக தரையிறங்கும். இந்த நிலையில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ‘டிவி-டி1’ என்ற சோதனை ராக்கெட்டின் சோதனை ஓட்டம் வருகிற 21-ம் தேதி நடைபெறும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. அதன்படி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வருகிற 21-ம் தேதி காலை 7 மணி முதல் 9 மணி வரை இந்த சோதனை ஓட்டம் நடைபெறும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!