கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசியல் தலையீட்டின் காரணமாக இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் மனோஜ் முனியன் என்பவரின் இடைக்கால பணிநீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தை துவங்கி உள்ளனர்.
உயர் நீதிமன்ற தீர்ப்பின் படி ஆக்கிரமிப்புகளை அகற்றிய வட்டாட்சியரை உள்நோக்கத்தோடு அரசியல் தலையீட்டின் காரணமாக இடைக்கால பணி நீக்கம் செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷ்ரவன் குமார் ஜடாஆவத் ஊழியர் விரோத நடவடிக்கைகளையும் இதனை திசைதிருப்பும் மேற்கொண்டு வரும் பாரபட்சமான மூன்றாம் தர நடவடிக்கைகளையும் கண்டித்து தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. மாவட்டத் தலைவர் தென்னரசு தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் யாரும் உள்ளே செல்லாதவாறு படியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட போது காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் வழிவிட்டு அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். மேலும் பெண் அலுவலர்களை ஒறுமையில் தரக்குறைவாக வசைப்பாடி அவமதித்தல், அரசு நிர்வாகத்தில் அத்துமீறி அடாவடியாக தலையிட்டு வரும் ரிஷிவந்தியம் எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் செயல்களை கண்டித்தும் போராட்டம் நடைபெற்று வருகிறது.