Skip to content
Home » கர்நாடக முதல்வர் பதவி……5 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது…. டில்லியில் நடந்தது என்ன?

கர்நாடக முதல்வர் பதவி……5 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது…. டில்லியில் நடந்தது என்ன?

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 34 ஆண்டுகளுக்கு பிறகு அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. அதாவது 223 தொகுதிகளில் போட்டியிட்டு 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது. கடந்த 13-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை முடிவடைந்த மறுநாளே காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. மேலிட பார்வையாளர்கள் சுஷில்குமார் ஷிண்டே, ஜிதேந்திர சிங், தீபக் பபாரியா ஆகியோரின் முன்னிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது.  இதில் புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் காங்கிரஸ் மேலிடத்திற்கு வழங்கி ஒரே வரியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து மேலிட பார்வையாளர்கள், ஒவ்வொரு எம்.எல்.ஏ.விடமும் தனித்தனியாக கருத்துகளை கேட்டு அறிந்தனர். யாரை முதல்-மந்திரி ஆக்கலாம் என்று அவர்கள் கருத்துகளை தெரிவித்தனர். அந்த கருத்துகளை ஒருங்கிணைத்து அறிக்கை தயாரித்த மேலிட பார்வையாளர்கள், கடந்த 15-ந் தேதி டில்லி புறப்பட்டு சென்றனர்.

அந்த அறிக்கையை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் தாக்கல் செய்தனர். பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு சித்தராமையாவுக்கு கிடைத்தது. இதையடுத்து மேலிடத்தின் அழைப்பின் பேரில் சித்தராமையா அன்றைய தினம் மதியம் டில்லி புறப்பட்டு சென்றார். உடல்நலக்குறைவு காரணமாக ஒரு நாள் தாமதமாக டி.கே.சிவக்குமார் டில்லிக்கு சென்றார்.அவர்கள் 2 பேரும் மல்லிகார்ஜுன கார்கேவை அவரது இல்லத்தில் தனித்தனியாக நேரில் சந்தித்து பேசினர். டி.கே.சிவக்குமார், தான் கஷ்டப்பட்டு கட்சியை பலப்படுத்தி வெற்றி பெற வைத்ததாகவும், அதனால் தனக்கு முதல்-மந்திரி பதவியை வழங்கியே தீர வேண்டும் என்றும் பிடிவாதமாக கூறினார்.

ஒருவேளை முதல்-மந்திரி பதவி வழங்காவிட்டால் ஆட்சியில் தான் பங்கேற்க போவது இல்லை என்றும் திட்டவட்டமாக கூறிவிட்டதாக தகவல் வெளியானது.சித்தராமையா, தான் 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்தபோது எந்த தவறும் செய்தது இல்லை என்றும், களங்கம் இல்லாமல் ஆட்சி நிா்வாகத்தை நடத்தியதாகவும், கட்சியின் வெற்றிக்கு தனது பங்களிப்பு அதிகமாக இருப்பதாகவும், தனக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்றும் கூறினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தியை சந்தித்து இருவர் கூறிய கருத்துக்கள் பற்றி ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் நேற்று ராகுல் காந்தியை டில்லியில் உள்ள அவருடைய இல்லத்தில் காலை 11 மணிக்கு சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் தனித்தனியாக சந்தித்து பேசினர். அப்போது, சித்தராமையாவிடம் பேசிய அவர், தங்களுக்கு முதல்-மந்திரி பதவி வழங்க இருப்பதாகவும், அனைவரையும் அரவணைத்து சிறப்பான முறையில் ஆட்சி நிர்வாகத்தை நடத்த வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். அதைத்தொடர்ந்து சந்தித்த டி.கே.சிவக்குமாரிடம் ராகுல் காந்தி, அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடிப்படையில் முதல்-மந்திரி பதவி சித்தராமையாவுக்கு வழங்க முடிவு செய்துள்ளதாகவும், தங்களுக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்குவதாகவும், வரும் காலத்தில் உங்களுக்கு உரிய பதவி வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

இதை ஏற்க மறுத்த டி.கே. சிவக்குமார், தனக்கு முதல்-மந்திரி பதவி வழங்கியே தீர வேண்டும் என்று பிடிவாதமாக கூறினார். மேலும் அவர், ஒருவேளை தனக்கு முதல்-மந்திரி பதவி வழங்காவிட்டால், சித்தராமையாவுக்கும் அந்த பதவி வழங்க கூடாது என்றும், அதற்கு பதிலாக மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்றும் கூறியதாக தகவல் வெளியானது. இதை ராகுல் காந்தி ஏற்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

இருவரும் முதல்வர் பதவிக்கு குறியாக இருந்ததால் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்ய முடியாமல் காங்கிரஸ் கட்சி திணறி கொண்டிருந்தது. அதற்கு ராகுல் காந்தி கட்சியின் நலன் கருதி இந்த முடிவை தாங்கள் ஏற்க வேண்டும் என்று சிவக்குமாரிடம் கேட்டுக் கொண்டார். இதையடுத்து இதற்கு சம்மதம் தொிவித்துவிட்டு அதிருப்தியுடன் டி.கே.சிவக்குமார் அங்கிருந்து வெளியே வந்தார். அங்கிருந்து நேராக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து பேசினார். அங்கு தனக்கு முதல்-மந்திரி பதவி வழங்காதது குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் இழுபறி நிலை முடிவுக்கு வராததால் கர்நாடக அரசியலில் பரபரப்பு நீடித்து வந்த நிலையில், கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையாவும்..துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக  இன்று அதிகாலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.   வரும் 20-தேதி பெங்களூருவில் பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் கர்நாடகத்தில் சித்தராமையா ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அவரது வீட்டு முன்  தொண்டர்கள் குவிந்துள்ளனர். அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று பிற்பகல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடக்கிறது. இதில் சித்தராமையா முறைப்படி முதல்வராக தேர்வு செய்யப்பட்டுகிறார். அதைத்தொடர்ந்து கவர்னரை சந்தித்து ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!