தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் சிறந்த 6 படைப்பாளிகளுக்கு மறைந்த முதல்வர் கருணாநிதி பெயரிலான கலைஞர் பொற்கிழி விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த விருதுடன் ரூ.1 லட்சம் பணமும், பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்படும். அதன்படி 2024-ம்ஆண்டுக்கான ‘முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது’ பெறுவோர் பட்டியல் நேற்று வெளியானது. இதில் பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியன் (உரைநடை), எழுத்தாளர்கள் தமிழ்மகன் (நாவல்), அழகிய பெரியவன் (சிறுகதை), கவிஞர் உமா மகேஸ்வரி (கவிதை), மயிலை பாலு (மொழிபெயர்ப்பு) வேலு. சரவணன் (நாடகம்) என 6பேருக்கு விருது அறிவிக்கப்பட் டுள்ளது.
இதேபோல், இதர பிரிவுகளில் வரும் பபாசியின் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பகச் செம்மல் க.கணபதி விருது-ச.அனுஷ் (எதிர் வெளியீடு), சிறந்தநூலகருக்கான விருது – எம்.ஆசைத்தம்பி (திருவாரூர்) உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த விருதுகளை ஜனவரி 3-ம் தேதி மாலை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறவுள்ள 47-வது சென்னை புத்தகக் காட்சி தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.