கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக மாற்றுத்திறனாளி பெண் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது கணவரும் மாற்றுத்திறனாளி என்பதால் துணைக்காக வேறு ஒரு பெண் உதவியோடு பிரசவத்திற்காக சேர்த்துள்ளனர். மருத்துவமனையில் உள்ள ஒரு பெண் ஊழியர் இவர்களிடம் 50 ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு இதோ வருவதாக சென்றவர் வரவே இல்லை என்றும் வேறு எந்த மருத்துவ உதவியும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், அந்த மாற்றுத்திறனாளி பெண் மருத்துவமனையில் இருந்து வெளியே சென்றுள்ளார்.
இந்த நிலையில் மருத்துவமனைக்கு போன் செய்த நபர் ஒருவர், தான் பசுபதிபாளையம் காவல் நிலைய எஸ்ஐ சந்திரசேகரன் பேசுவதாகவும், பிரசவத்திறகாக சேர்க்கப்பட்ட ஒரு மாற்றுத் திறனாளி பெண் எப்படி மருத்துவமனையை விட்டு வெளியே வந்தார்? என செவிலியர் ஒருவரிடம் கேட்டுள்ளார். அதற்கு செவிலியர் ஒருவர் பொறுப்பற்ற பதில் பேசியுள்ளார். அப்போது, டென்சனான அந்த நபர் செவிலியரை ஒருமையில் பேசும் ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து போலீஸ் தரப்பில் விசாரித்த போது, எஸ்ஐ சந்திரசேகர் என்ற பெயரை சொல்லி யாரோ ஒருவர் பேசியதாக தெரிவித்தனர். மருத்துவக் கல்லூரி நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் பெயரை தவறாக பயன்படுத்திய மர்ம நபர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.