திருச்சியை சேர்ந்தவர் ரகுநாதன் ( 54). வெல்டிங் மெஷின் மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 2000-ம் ஆண்டு திருச்சியிலிருந்து வெளியேறி நாமக்கல்லில் குடியேறினார். அங்கு தன்னுடைய தொழிலை பார்த்துக் கொண்டு கடந்த 2002-ல் தண்ணீரில் இயங்கும் வெல்டிங் மெஷின் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். அப்போது, அவரை பலரும் பாராட்டியுள்ளனர்.
அதனை தொடர்ந்து முதல்வராக இருந்த கருணாநிதி மற்றும் ஜெயலலிதா உள்ளிட்டவர்களுக்கு கடிதம் அனுப்பி இது தொடர்பாக தெரிவித்துள்ளார். முதல்வராக இருந்த ஜெயலலிதா அவரை நேரில் வரவழைத்து அவருடைய கண்டு பிடிப்பை கேட்டறிந்ததுடன், அவற்றிற்கு காப்புரிமையை பெற்று வரும்படி அறிவுறுத்தியதுடன், அவருக்கு 60 ஆயிரம் ரூபாய் கடன் வசதியும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து நாமக்கல்லில் இருந்து வெளியேறி கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆண்டாங்கோவிலை அடுத்த செட்டிபாளையம் புதூரில் குடும்பத்துடன் கடந்த 17 வருடங்களாக வசித்து வருகிறார். இங்கேயும் தனது தொழிலை பார்த்துக் கொண்டு தன் மகனுடன் சேர்ந்து நில அதிர்வை முன் கூட்டியே கண்டறியும் கருவியை கடந்த 2009ம் ஆண்டு கண்டறிந்துள்ளார். இது தொடர்பாக அப்போதைய ஆட்சித் தலைவர் உமா மகேஸ்வரியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
அதன் பிறகு யாரும் தன்னை கண்டு கொள்ளவில்லை என்றும், கரூர் மாவட்ட ஆட்சியர்கள், முன்னாள், இன்னாள் முதல்வர்களுக்கு கடிதம் அனுப்பியும் தனக்கு எந்தவித அனுமதியும் கிடைக்கவில்லை என்றும், தற்போது வரை தனது கண்டு பிடிப்பிற்காக 20 லட்ச ரூபாய் வரை கடன் வாங்கி செலவு செய்து இருப்பதாகவும், தனக்கு உரிய தீர்வு வேண்டும் எனக் கூறி கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் அமைந்துள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகள் முன்பு தரையில் அமைர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, தன்னுடைய நிலை குறித்து, அப்பகுதியில் பொதுமக்களிடம் எடுத்துரைத்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கரூர் நகர போலீசார் அவரிடம் போராட்டம் தொடர்பாக கேட்ட போது தான் எந்த போராட்டத்திலும் ஈடுபடவில்லை எனக் கூறி அங்கிருந்து புறப்பட்டார். 3ம் வகுப்பு வரை மட்டுமே படித்து, தண்ணீரில் இயங்கும் வெல்டிங் இயந்திரத்தை கண்டு பிடித்தவர் கடந்த பல ஆண்டுகளாக போராடி வருவது குறிப்பிடத்தக்கது.