Skip to content
Home » திருச்சி காவேரி மாரத்தானில் குளறுபடி…… பரிசு மறுக்கப்பட்டதால் வீரர் கண்ணீர்…

திருச்சி காவேரி மாரத்தானில் குளறுபடி…… பரிசு மறுக்கப்பட்டதால் வீரர் கண்ணீர்…

  • by Senthil

திருச்சி காவேரி மருத்துவமனை திருச்சி மற்றும் CII மற்றும் YII இணைந்து 8வது முறையாக திருச்சியில் நேற்று காவேரி மாரத்தான் ஓட்டம்  நடத்தியது. உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த  இந்த மாரத்தான் நடத்தப்பட்டது.

5 கி. மீ., 10 கி. மீ. 21 கி. மீ  என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.  வெற்றி  பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் ஒரு டி-ஷர்ட், பிப், பை, பதக்கம் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

5 கிலோ மீட்டர் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு, திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆகியோர் கொடியசைத்து செய்து தொடங்கிவைத்தார்.

10 கிலோ மீட்டர் மாரத்தான் ஓட்ட பந்தயத்தை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி யும், 21 கி. மீ. தூர அரை மாரத்தான் ஓட்டத்தை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரும், கொடியசைத்து செய்து தொடங்கி வைத்தனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் நடந்தது.  இதில் 41வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான  போட்டியில் திருச்சி  பெல்   டெக்னீஷியன் செந்தில்குமார் என்பவர் 3வது இடத்தை பிடித்தார். அவருக்கு 3 வது இடம் பிடித்ததற்கான   டேக் அணிவிக்கப்பட்டு, 3வது இடம் பிடித்தவருக்கான இருக்கையில் அமரவைக்கப்பட்டார்.

பரிசளிப்பு விழா நடந்தபோது 41வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான போட்டியில்  3வது இடம் பிடித்தவர் முத்தையா என அறிவிக்கப்பட்டு, இன்னொருவருக்கு பரிசு வழங்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த செந்தில்குமார் , நான் தான் 3வது இடம் பிடித்தேன். என் பெயர் செந்தில்குமார் என சத்தமாக கூறினார். ஆனால் அதை யாரும் கண்டுகொள்ளவில்லை.

எனவே பரிசளிப்பு விழா முடிந்ததும் மேடைக்கு சென்று  3வது இடம் பிடித்தது நான். எனக்கு அதற்கான டேக் அணிவிக்கப்பட்டு, 3வது இடம் பிடித்தவர் உட்காரும் இடத்தில் உட்கார வைக்கப்பட்டேன்.  எனக்கு ஏன் பரிசு தரவில்லை என விழாக்குழுவினரிடம் கேட்டார். அதற்கு அவர்கள் நடுவர்கள்  சொன்ன தீர்ப்புபடி  முத்தையாவுக்கு பரிசு வழங்கி விட்டோம். உங்களுக்கு 3வது இடம் இல்லை என கூறி விட்டனர்.

அப்படியானால் எனக்கு ஏன் 3வது இடத்திற்கான டேக் அணிவித்து அதற்கான இடத்தில் உடகார வைத்தீர்கள் என  செந்தில்குமார் கேட்டு உள்ளார். அதற்கு அவர்கள் பரிசளிப்பு விழா முடிந்து விட்டது . இனி ஒன்றும் செய்ய முடியாது என ஆறுதல் கூறி ஒரு கவரில் ரூ.1000  வைத்து கொடுத்து உள்ளனர்.

இதனால் வெறுத்து போன செந்தில்குமார், அங்கிருந்த பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:

இந்த ஆயிரம் ரூபாய்க்காக நான் ஓடவில்லை. 3வது இடம் கொடுத்து விட்டு ஏன், அதை பறித்தீர்கள் அதற்கான காரணத்தை சொல்லுங்கள்  என்று தான் கேட்டேன்.  ஆனால் சரியான விளக்கம் அவர்கள் அளிக்கவில்லை.  என்னை சமாதானம் செய்யத்தான் அவர்கள் முயற்சி செய்தார்கள். நான் முதன் முதலாக பங்கேற்ற மாரத்தான் அனுபவம் எனக்கு மிகவும் கசப்பாக அமைந்து விட்டது.

இவ்வாறு அவர் கண்ணீர்மல்க  கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!