Skip to content
Home » குருபெயர்ச்சி பலன்கள்…01.05.2024 முதல் 13.04.2025 வரை…

குருபெயர்ச்சி பலன்கள்…01.05.2024 முதல் 13.04.2025 வரை…

நிகழும் குரோதி வருடம் சித்திரை மாதம் 18-ம் நாள், புதன்கிழமை, 01.05.2024 கிருஷ்ண பட்சத்து, அஷ்டமி திதி, திரு வோண நட்சத்திரம், சுபம் நாமயோகம், பாலவம் நாமகரணத்தில், நேத்திரம் ஜுவனம் நிறைந்த சித்தயோக நன்னாளில் பிரகஸ்பதியாகிய குருபகவான் சர வீடான மேஷ ராசியி லிருந்து ஸ்திர வீடான ரிஷப ராசிக்குள் மதியம் 1 மணிக்கு பெயர்ச்சியாகிறார்.

பொன்னவன், மன்னவன், தென்னவன் என்றெல்லாம் புகழப் படும் குருபகவான் மட்டும் தான் நவகிரகங்களில் முழு சுபராக உள்ளவர். சுபத் தன்மையுடன் சுபராகி இருப்பதால் தான் குரு பார்த்திட கோடி புண்ணியம், குரு காண கோடி தோஷம் விலகும் என இவர் பார்வைக்கெல்லாம் ஜோதிட நூல்கள் பலன் சொல்லி இருக்கின்றன.

01.05.2024 முதல் 13.04.2025 வரை.. குருப் பெயர்ச்சி பலன்கள் எப்படி இருக்கும்….

மேஷம்… பரந்து விரிந்த பொது அறிவு உள்ளவர்களே! கடந்த ஓராண்டு காலமாக உங்களுடைய ராசிக்குள்ளே அமர்ந்து உங்களை பலவிதப் பிரச்சினைகளாலும் கசக்கிப் பிழிந்தெடுத்த குருபகவான் 01.05.2024 முதல் 13.04.2025 வரை 2-ம் வீட்டில் நுழைக்கிறார். இனி சோர்வு, களைப்பு நீங்கும். நோயிலிருந்து விடுபடுவீர்கள். அழகு, ஆரோக்கியம் கூடும். கடன் பிரச்சினையிலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக மீள்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஈகோ பிரச்சினையால் பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள்.

கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். கணவர் தன் தவறை உணருவார். உங்களுக்குள் கலகத்தை உண்டாக்கியவர்களை இனம் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கும் வேலைக் கிடைக்கும். வீடு, மனை அமையும். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு வேலைக் கிடைக்கும். குரு 6-ம் வீட்டை பார்ப்பதால் வழக்குகள் சாதகமாகும்.

எதிர்பாராத வகையில் முக்கிய பிரமுகர்களுடன் சந்திப்பு நிகழும். மாமனார், மாமியாரின் எதிர்ப்பு நீங்கும். மச்சினருக்கு திருமணம் முடியும். குரு 8- ம் வீட்டை பார்ப்பதால் அயல்நாடு செல்வீர்கள். சிலருக்கு வெளிநாட்டில் வேலைக் கிடைக்கும். குரு 10-ம் வீட்டை பார்ப்பதால் வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்கள், நண்பர்களின் பாராமுகம் நீங்கும். சமூக அந்தஸ்து கூடும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டு.

உங்களின் ஸ்டேட்டஸ் ஒரு படி உயரும். வழக்கால் இருந்த நெருக்கடிகள் படிப்படியாக நீங்கும். வீண் பழியிலிருந்து விடுபடுவீர்கள். சொத்து சேர்க்கை உண்டு. சொந்த ஊர் பொதுக் காரியங்களையெல்லாம் முன்னின்று நடத்தி வைப்பீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.

ரிஷபம்…

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை உணர்ந்தவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு விரயஸ்தானத்தில் அமர்ந்து பலவிதங்களிலும் உங்களுக்கு நஷ்டங்களையும், பிரச்சினைகளையும், நிம்மதியற்றப் போக்கையும் உருவாக்கிக் கொண்டிருந்த குருபகவான் இப்போது 01.05.2024 முதல் 13.04.2025 வரை உங்கள் ராசிக்குள் நுழைகிறார். ஜென்ம குரு என்பதால் நீங்கள் இனி ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும்.

சிறுசிறு உடற்பயிற்சிகள் மேற்கொள்வது நல்லது. உணவு கட்டுப்பாடும் இனி அவசியமாகிறது. கொழுப்புச் சத்து, வாயுப் பதார்த்தங்களையெல்லாம் நீங்கள் தவிர்ப்பது நல்லது. கணவருடன் சின்ன சின்ன மோதல்கள் அதிகமாகிக் கொண்டே போகும். சாதாரண விஷயத்தையெல்லாம் பெரிதாக்காதீர்கள். சந்தேகப் பார்வையை தவிர்த்துவிடுவது நல்லது.

முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவார்கள். அரசியல் செல்வாக்குக் கூடும். குரு உங்களுடைய ராசிக்கு 5-ம் வீட்டை பார்ப்பதால் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வாழ்க்கை அமையும். மகனுக்கும் நீங்கள் எதிர்பார்த்தபடி எல்லாம் சிறப்பாக அமையும். பூர்வீக சொத்து கைக்கு வரும். குரு 7-ம் வீட்டை பார்ப்பதால் கணவர் உங்களைப் புரிந்துக் கொள்வார்.

மிதுனம்… 

மனித நேயத்தின் மறுஉருவ மாய் விளங்குபவர்களே! கடந்த ஓராண்டு காலமாக உங்களுடைய ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து பணவரவையும், செல்வாக்கையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் அள்ளிக் கொடுத்த குருபகவான் இப்போது 01.05.2024 முதல் 13.04.2025 வரை ராசிக்கு 12-வது வீட்டில் நுழைக்கிறார். 12-ல் குரு நுழைவதால் பயணங்கள் அதிகமாகும்.

செலவுகளும் கூடிக் கொண்டே போகும். திட்டமிட்ட காரியங்கள் தள்ளிப் போய் முடியும். அடிக்கடி உணர்ச்சி வசப்படுவீர்கள். முன்கோபத்தையும் கொஞ்சம் கட்டுப்படுத்துவது நல்லது. கணவரை சந்தேகக் கண் கொண்டு பார்க்க வேண்டாம். பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் பொறுப்பாக இருந்தால் நல்லது என்று ஆதங்கப்படுவீர்கள். மாமனார், மாமியார் மற்றும் உறவினர்களால் தவிர்க்க முடியாத செலவுகள் அதிகரிக்கும்.

நெருங்கிய உறவினர், தோழிகளின் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சி களை முன்னின்று நடத்துவீர்கள். குரு 4-ம் வீட்டை பார்ப்பதால் வாகனம் வாங்குவீர்கள். சிலர் புது வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்வீர்கள். குரு 6-ம் வீட்டை பார்ப்பதால் நோய் குறையும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றி வெற்றி பெறுவீர்கள்.

குரு 8-வது வீட்டை பார்ப்பதால் புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வெளிநாட்டில், வெளிமாநிலங்களில் இருப்பவர்களுடன் சேர்ந்து புது தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உண்டாகும். உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகள் உங்களை விட்டு பிரிவார்கள்.

தன்னம்பிக்கை குறைந்தாலும் ஜெயித்து காட்டுவீர்கள். தாய்வழி சொத்துகளில் சிக்கல்கள் வரக்கூடும். வீடு வாங்குவது, கட்டுவது கொஞ்சம் இழுபறியாகி முடியும். எந்த சொத்து வாங்கினாலும் தாய் பத்திரத்தை சரி பார்ப்பது நல்லது. வீடு மாற வேண்டிய சூழல் உருவாகும். சிலர் இருக்கும் ஊரிலிருந்து, மாநிலத்திலிருந்து வேறு ஊர், மாநிலம் செல்ல வேண்டிய அமைப்பு உண்டாகும்.

மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்துக் காட்டுவீர்கள். உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும்.. சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். புதிய வீடு வாங்குவீர்கள்.

கடகம்..எதையும் இலவசமாக பெற்றுக் கொள்ள விரும்பாதவர்களே! கடந்த ஓராண்டு காலமாக உங்களுடைய ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு பல விதங்களிலும் அவமானங்களையும், தோல்வியையும் கொடுத்த குருபகவான் இப்போது 01.05.2024 முதல் 13.04.2025 வரை லாப வீட்டில் நுழைகிறார். உங்கள் ஆழ்மனதில் இருக்கும் தாழ்வு மனப்பான்மை நீங்கும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பிள்ளை பாக்கியமும் கிடைக்கும்.

நெடுநாள் ஆசையான வீடு, மனை வாங்குவது, வீடு கட்டுவது போன்ற முயற்சிகளும் பலிதமாகும். புது வேலைக்கு முயற்சி செய்த இடத்தில் இருந்து நல்ல பதில் வரும். அயல்நாட்டில் வேலை கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். பார்த்தும் பார்க்காமல் சென்றுக் கொண்டிருந்த சொந்த – பந்தங்க ளெல்லாம் வலிய வந்துப் பேசு வார்கள். முன்கோபம் குறையும்.

எதிர்பார்த்து காத்திருந்த தொகை கைக்கு வரும். ஷேர் மூலமாகவும் சம்பாதிப்பீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். கணவர் மனம் விட்டுப் பேசுவார். கணவர்வழி உறவினர்களும் மதிப் பார்கள். மாமனாரின் உடல் நிலை சீராகும். மச்சினருக்கு வேலைக் கிடைக்கும். குரு உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டை பார்ப்பதால் புது டிசைனில் நகை வாங்குவீர்கள். இளைய சகோதரருக்கு திருமணம் முடியும். தைரியம் பிறக்கும்.

குரு 5-ம் வீட்டை பார்ப்பதால் குழந்தை பாக்கியம் உண்டு. பூர்வீக சொத்துப் பிரச்சினை தீரும். வழக்கு சாதகமாகும். குரு 7-ம் வீட்டை பார்ப்பதால் பிரபலமாவீர்கள். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மகன் மற்றும் மகளின் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உங்களிடமிருந்த கற்பனைத் திறன், கலைத் திறனை வெளிப்படுத்தவும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும்

சிம்மம்…

மனதில் தோன்றுவதை மறைக்காமல் பேசுபவர்களே! கடந்த ஓராண்டு காலமாக உங்களுடைய ராசிக்கு 9-ம் இடத்தில் அமர்ந்து ஓரளவு பணவரவையும் தந்துக் கொண்டிருந்த குருபகவான் இப்போது 01.05.2024 முதல் 13.04.2025 வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டுக்குள் நுழைக்கிறார்.

10-ம் இடம் பதவியை கெடுக்குமே, அந்தஸ்தை குறைக்குமே என்றெல்லாம் பெரிதாக கவலைப்பட வேண்டாம். ஓரளவு நல்ல பலன்கள் உண்டாகும். 10-ல் குரு அமர்வதால் வேலைச்சுமை அதிகமாகும்.

பெரிய பிரச்சினைகளெல்லாம் வந்துவிடுமோ, இதுவரை கட்டிக் காப்பாற்றிய கௌரவத்தை இழந்து விடுவோமோ என்ற கவலைகள் வந்து நீங்கும். உங்களுடைய ஆலோசனைகளை குடும்பத்தில் உள்ளவர்கள் ஏற்றுக் கொள்வதில்லையென்று ஆதங்கப்படு வீர்கள். மற்றவர்களுக்கு ஜாமீன் கையொப்பமிட வேண்டாம். உங்கள் பெயரை சிலர் தவறாகப் பயன்படுத்தக் கூடும்.

முக்கிய விஷயங்களுக் கெல்லாம் இடைத்தரகர்களை நம்பாமல் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. ஊர் பொது விஷயங்களில் அதிகம் தலையிடாமல் இருப்பது நல்லது. சில காரியங்களை முன்னின்று நடத்தப்போய் நீங்கள் விமர்சனத்துக்கு உள்ளாக நேரிடும். கணவருடன் வாக்குவாதங்கள் வரும். அவரும் அடிக்கடி கோபப்படுவார். அவர் ஏதோ ஒரு டென்ஷனில் கத்துவதையெல்லாம் நீங்கள் பெரிதுபடுத்திக் கொண்டிருக்க வேண்டாம்.

பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணத்துக்காக அதிகம் அலைய வேண்டி வரும். மாமனார், மச்சினர், நாத்தனார் வகையில் விமர்சனங்கள் அதிகமாகும். உங்களின் யதார்த்தமான பேச்சை சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். உறவினர், தோழிகளுக்கு ஓடி ஓடி உழைத்தும் யாரிடமும் நன்றியில்லையே என்று வருத்தப்படுவீர்கள்.

குருவின் பார்வை உங்களுடைய ராசிக்கு 2-ம் வீட்டின் மீது விழுவதால் பணவரவு குறையாது. வருமானம் உயரும். ஆனால் தவிர்க்க முடியாத செலவுகளால் பணப் பற்றாக்குறை இருந்துக் கொண்டேயிருக்கும். குரு 4-ம் வீட்டை பார்ப்பதால் தாயாரின் உடல் நிலை சீராகும். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். வீடு மாறுவீர்கள். குரு 6-ம் வீட்டை பார்ப்பதால் பழைய கடனை பைசல் செய்ய வழி பிறக்கும்.

கன்னி… 

கனிவான விசாரிப்பால் மற்றவர்களையும் கவர்ந்திழுப்பவர்களே! கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு 8-ல் அமர்ந்து உங்களுக்கு பணத் தட்டுப்பாட்டையும், பிள்ளைகளால் பிரச்சினைகளையும், குடும்பத்தில் நிம்மதியற்றப் போக்கையும் உருவாக்கிய குருபகவான் இப்போது 01.05.2024 முதல் 13.04.2025 வரை 9-ம் வீட்டில் இருக்கிறார். குருபகவான் 9-ம் வீட்டுக்குள் நுழைவதால் உங்கள் வாழ்க்கையில் பல திருப்பங்களும், யோகங்களும் அடுத்தடுத்து நடக்கும்.

ஈகோ பிரச்சினையாலும், உறவினர்களின் சூழ்ச்சியாலும் பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வருமானம், வசதி, வாய்ப்புகள் கூடும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.

குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் நோய் விலகும். தாழ்வு மனப்பான்மை நீங்கும். அழகு, ஆரோக்கியம் கூடும். கணவர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார். பல வரன் வந்தும் ஒரு வரனும் அமையவில்லையே என்று தவித்த உங்களுடைய மகளுக்கு நல்ல வரன் அமையும். திருமணத்தை கோலாகலமாக நடத்துவீர்கள்.

பிள்ளைகளிடம் இருந்து வந்த பிடிவாதப் போக்கு நீங்கும். மாமனார், மாமியார் வகையில் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். பாகப்பிரிவினை நல்ல விதத்தில் முடியும். நாத்தனார், மச்சினரின் உதாசீனப் போக்கு மாறும். உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். குரு 3-ம் வீட்டை பார்ப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பழைய நகையை மாற்றி புது டிசைனில் வாங்குவீர்கள். சகோதர பாசம் அதிகரிக்கும். குரு 5-ம் வீட்டை பார்ப்பதால் நிம்மதி உண்டு. ஆழ்ந்த உறக்கம் வரும். செல்வாக்குக் கூடும்.

உத்தியோகம், வியாபாரத்தின் பொருட்டு கணவர் அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். அதனால் சிறுசிறு பிரிவுகள் ஏற்படும். குரு 9-ம் வீட்டை பார்ப்பதால் பணப் புழக்கம் உண்டு. விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். ஜென்ம குருவாக இருப்பதால் பணப்பற்றாக்குறையும் அவ்வப்போது ஏற்படும். மற்றவர்களுக்கு ஜாமீன் கையொப்பமிட வேண்டாம். தூக்கம் கொஞ்சம் குறையும். பெரிய நோய்கள் இருப்பதைப் போல் தோன்றும். ஆனால் பாதிப்புகள் இருக்காது.
துலாம்… 

தன் பத்து விரல்களையே சொத்தாக நினைப்பவர் களே! உங்களுடைய ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு நிம்மதியை தந்த குருபகவான் இப்போது 01.05.2024 முதல் 13.04.2025 வரை 8-ம் வீட்டுக்குள் நுழைக்கிறார். 8-ல் குரு வந்தால் எல்லாம் தட்டிப் போகுமே, தள்ளிப் போகுமே என்று கவலைப்பட வேண்டாம். குரு 8-ல் அமர்ந்தாலும் முக்கியமான வீடுகளைப் பார்ப்பதால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.

தள்ளிப் போன அயல்நாட்டுப் பயணம் கூடி வரும். அயல்நாட்டில் வேலைக் கிடைக்கும். வேற்றுமொழிப் பேசுபவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். செலவுகள் ஒருபக்கம் இருந்துக் கொண்டேயிருக்கும். தவிர்க்க முடியாத பயணங்களும் அதிகரிக்கும். ஆனாலும் அவற்றையெல்லாம் சமாளிக்கும் சக்தியும் உங்களுக்குக் கிடைக்கும்.

கணவன் – மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வரும். கணவருக்கு கொஞ்சம் அலைச்சல் இருக்கும். அவருக்கு உத்தியோகத்தில் இடமாற்றமும், வேலைச்சுமையும் இருக்கும். மாமனார், மாமியார் வகையில் அலைச்சல், செலவுகள் வரும். நாத்தனார், மச்சினருடன் இருந்து வந்த பனிப்போர் நீங்கும். நாத்தனார் வீட்டு விசேஷங்களையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள்.

குரு 8-ல் மறைவதால் தங்க ஆபரணங்களை இரவல் தரவோ, வாங்கவோ வேண்டாம். குடும்பத்தினருடன் வெளியூர் செல்லும் போது வீட்டின் பாதுகாப்பை உறுதி செய்துவிட்டு செல்வது நல்லது. குரு 2-ம் வீட்டை பார்ப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். உணர்ச்சிவசப்பட்டு பேசாமல் யதார்த்தமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள்.

குரு 4-ம் வீட்டை பார்ப்பதால் வீடு, மனை வாங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். புது வீட்டுக்கு குடிபுகுவீர்கள். குரு 12-ம் வீட்டை பார்ப்பதால் தூக்கம் வரும். புண்ணிய ஸ்தலங்களுக்கும் சென்று வருவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். முடிவுகள் எடுப்பதில் ஒருவித குழப்பமும், தடுமாற்றமும் இருந்துக் கொண்டேயிருக்கும்.

பிள்ளைகளிடம் கண்டிப்புக் காட்டாமல் தோழமையாக பழகுங்கள். அவர்களின் உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் மதிப்புக் கொடுங்கள். மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். வரன் வீட்டாரை நன்கு விசாரித்து முடிப்பது நல்லது. மகனின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தமாக அதிகம் செலவு செய்து சிலரின் சிபாரிசை நாடுவீர்கள்.

யோகா, தியானம் மூலம் எதிர்மறை எண்ணங்களை சரிசெய்து கொள்ளுங்கள். வீண் அலைச்சல் அதிகரிக்கும். தன்னம்பிக்கை குறையும். செலவுகள் கட்டுக் கடங்காமல் போகும். சில வேலைகளை போராடி முடிக்க வேண்டி வரும். வங்கிக் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு காசோலை தருவது நல்லது. மறதியால் விலை உயர்ந்த தங்க ஆபரணங்களை இழக்க நேரிடும். முன்கோபத்தால் நல்லவர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். அரசுக்கு முரணான விஷயங்களில் தலையிடாதீர்கள்.

விருச்சிகம்… 

சமூக அவலங்களைத் தட்டிக் கேட்க தயங்காதவர்களே! கடந்த ஓராண்டு காலமாக உங்களுடைய ராசிக்கு 6-ம் வீட்டில் அமர்ந்து உங்களை பலவிதங்களிலும் பாடாய்படுத்தி, அடிமட்டத்துக்கு தள்ளிய குருபகவான் இப்போது 01.05.2024 முதல் 13.04.2025 வரை 7-ம் வீட்டுக்குள் வந்தமர்கிறார். உங்களுடைய ராசியை பார்க்க இருப்பதால் கவலை ரேகைகள் ஓடிக் கொண்டிருந்த உங்கள் முகத்தில் இனி மகிழ்ச்சி ரேகைகள் மலரத் தொடங்கும்.

சின்னச் சின்ன பிரச்சினைகளை பெரிதாக்கி அதனால் பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவீர்கள். அடுக்கடுக்காக ஏற்பட்ட விபத்துகள், நஷ்டங்கள், அவமானங்கள், பிரச்சினைகள் இவற்றில் இருந்தெல்லாம் விடுபட்டு முன்னேறுவீர்கள். கணவருடன் இருந்து வந்த பகைமை நீங்கும். சந்தேகம் விலகும். ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசுவீர்கள்.

அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உங்களை எதிர்த்துக் கொண்டிருந்த உறவினர், தோழிகளெல்லாம் அடங்குவார்கள். வளைந்து வந்துப் பேசுவார்கள். வருமானம் உயரும். வசதிகள் கூடும். வீடு, மனை வாங்குவீர்கள். வாகனத்தை மாற்றுவீர்கள். தள்ளிப் போன திருமணம் முடியும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

மாமனார், மாமியார் உங்கள் வார்த்தையை இனி மறுத்துப் பேச மாட்டார்கள். நாத்தனாரும் உங்கள் முடிவுக்கு கட்டுப்படுவார். மச்சினரும் மரியாதைத் தருவார். மருந்து, மாத்திரை நீங்கி ஆரோக்கியம், அழகு கூடும். குரு 3-ம் வீட்டை பார்ப்பதால் தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். கணவரும் உங்களுடைய புதிய திட்டங் களை ஆதரிப்பார். குரு லாப வீட்டை பார்ப்பதால் மூத்த சகோதர வகையில் ஆதாயம் உண்டு.

உங்களின் திறமைக்கு ஓர் அங்கீகாரம் கிடைக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியவர்களை இனம் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். விலை உயர்ந்த ரத்தினங்கள், ஆபரணங்கள் வாங்குவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். மனைவிவழி உறவினர்கள் உங்களுடைய பெருந்தன்மையைப் புரிந்துக் கொள்வார்கள். சொந்த – பந்தங்களின் அன்புத் தொல்லைகள் குறையும். அக்கம் – பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். பூர்வீக சொத்தில் சீரமைப்புப் பணிகள மேற்கொள்வீர்கள்.

சின்ன சின்ன வேலைகளைக் கூட அலைந்து முடிக்க வேண்டி வரும். எந்த விஷயமாக இருந்தாலும் நீங்களே நேரடியாக தலையிட்டு முடிப்பது நல்லது. சொத்து வாங்கும்போது முறையான பட்டா, வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் வழக்கறிஞரை வைத்து சரி பார்த்து வாங்குவது நல்லது.
நெருங்கிய நண்பர்கள், உறவினர்களாக இருந்தாலும் இடைவெளி விட்டுப் பழகுவது நல்லது. ஷேர் மூலம் பணம் வரும்.

எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். கோயில் திருவிழாக்கள், கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். புதுப் பதவிக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வேற்று மாநிலத்தவர்கள், மாற்று மதத்தவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். சிலர் சொந்தமாக தொழில் தொடங்குவீர்கள். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள்.

தனுசு…. 

சுற்றுப்புறச் சூழலுக்கு கட்டுப்படாமல் தனக்கென தனிப்பாதையில் செல்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் கொடுத்த குருபகவான் இப்போது 01.05.2024 முதல் 13.04.2025 வரை 6-ம் வீட்டில் சென்று மறைகிறார். 6-ம் வீடு ஆறாக்கும், கூறாக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. முடிந்தவரை மற்றவர்கள் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. நீங்கள் சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடிய வாய்ப்பிருக்கிறது. செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும்.

உறவினர்கள், தோழிகள் வீட்டு திருமணம், கிரகப் பிரவேசம் நிகழ்ச்சிகளை எல்லாம் நீங்கள் தான் செலவு செய்து பார்க்க வேண்டிய சூழ்நிலை வரும். கணவருடன் கருத்து மோதல் வரும். மாமனார், மாமியார், நாத்தனார் வகையிலும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. நீங்கள் யதார்த்தமாகப் பேசுவதைக் கூட அவர்கள் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். முன்கோபத்தை குறைக்கப் பாருங்கள்.

யாரேனும் உங்களுடைய தவறுகளை சுட்டிக் காட்டினால் மாற்றிக் கொள்வது நல்லது. தவறு செய்யாமலேயே நீங்கள் தவறு செய்தாக சிலர் வீண் பழி சுமத்துவார்கள். பிள்ளைகளிடம் உங்கள் கோபத்தை காட்ட வேண்டாம். அவர்களின் திறமையைக் கண்டறிந்து அதற்கேற்ப அவர்களை ஊக்கப்படுத்தப் பாருங்கள். குரு 12-ம் வீட்டை பார்ப்பதால் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வீடு, மனை வாங்குவது, வீடு கட்டுவதற்கெல்லாம் வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.

குரு 2-ம் வீட்டை பார்ப்பதால் ஓரளவு பணவரவு உண்டு. நீங்கள் எதிர்பார்க்கும் தேதியில் பணம் கிடைக்காவிட்டாலும் கடைசி நேரத்தில் கைக்கு வந்து சேரும். குரு 10-ம் வீட்டை பார்ப்பதால் வேறு வேலைக்கு மாற வேண்டி வரும். புது வேலைக் கிடைக்கும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். எதையும் காலத்தில் கட்டிவிடுவது நல்லது. வழக்கால் நிம்மதியிழப்பீர்கள். காசோலைகள் தருவதற்கு முன்பாக யோசித்து தருவது நல்லது.

மகரம்… 

தன் பலம் பலவீனம் அறிந்து, தன்னை தயார்படுத்திக் கொள்பவர்களே! குரு பகவான் கடந்த ஓராண்டு காலமாக 4-ம் வீட்டில் அமர்ந்து உங்களை நாலாவிதத்திலும் கஷ்டப்படுத்தினார். நிம்மதியில்லாமலும், தூக்கமில்லா மலும், விரக்தியிலும், வேதனையிலும் நீங்கள் அலைந்தீர்கள். இப்போது 01.05.2024 முதல் 13.04.2025 வரை 5-ம் வீட்டில் அமர்வதால் இனி விஸ்வரூபம் எடுப்பீர்கள். தொட்ட காரியங்கள் துலங்கும்.

தடைகளும், தடுமாற்றங்களும் நீங்கும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவீர்கள். கணவரும் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப புது வீடு அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

கணவர் ஒருபக்கம், மனைவி ஒருபக்கம், பிள்ளைகள் ஒருபக்கம் என்று பிரிந்து இருந்தவர்கள் இனி ஒன்று சேருவீர்கள். மகளுக்கு திருமணம் சீரும், சிறப்புமாக முடியும். மகனுக்கு வேலை கிடைக்கும். குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் நோய் விலகும். முகத்தில் அழகு, இளமைக் கூடும். குரு 9-ம் வீட்டை பார்ப்பதால் வழக்கு சாதகமாகும். வழக்கால் பணம் உண்டு.

உங்களிடம் பணம் வாங்கி ஏமாற்றியவர்களெல்லாம் பணத்தை திருப்பித் தருவார்கள். புது முதலீடு செய்து தொழில் தொடங்குவீர்கள். தந்தைவழியில் இருந்த மனக்கசப்பு நீங்கும். தந்தையாரும் ஆதரவாகப் பேசுவார். தந்தைவழி சொத்து சேரும்.

லாப வீட்டை குரு பார்ப்பதால் மூத்த சகோதரர் ஆதரவாக இருப்பார். சிலருக்கு ஷேர் மூலம் பணம் வரும். அக்கம் – பக்கம் வீட்டாருடன் இருந்த சச்சரவு நீங்கும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். நாத்தனார், மச்சினர் மதிப்பார்கள். மாமனார், மாமியார் உங்களுடைய முடிவை ஏற்றுக் கொள்வார்கள்.

கும்பம்…. 

உள்ளத்தில் அழுதா லும், உதட்டால் சிரிப்ப வர்களே! கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு உங்களை பலவிதங்களிலும் முடக்கிப் போட்ட குருபகவான் 01.05.2024 முதல் 13.04.2025 வரை உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் அமர்கிறார். குரு 4-ம் வீட்டில் அமர்வதால் கடந்த ஓராண்டை விட இனி நல்லது நடக்கும். தயக்கம், தடுமாற்றங்கள் இனி நீங்கும். உங்களுக்குள் இருந்த தாழ்வு மனப்பான்மை விலகும். இடமாற்றமும் இருக்கும்.

வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். உங்கள் பலத்தை புரிந்துக் கொள்வீர்கள். கணவருக்கும் உங்களுக்குமிடையே இடைவெளி ஏற்படுத்த சிலர் முயல்வார்கள். விட்டுக் கொடுத்து போவது நல்லது. அனுமதி பெறாமல் வீடு கட்டத் தொடங்க வேண்டாம். தாயாரின் உடல் நிலை பாதிக்கும். மனத்தாங்கலும் வந்து நீங்கும்.

சரியான நேரத்தில் சாப்பிட முடியாமல் போகும். பிள்ளைகளின் உயர்கல்வி, திருமண விஷயத்தில் அலைச்சல் அதிகமாக இருக்கும். கர்ப்பிணிப் பெண்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. பூர்வீக சொத்துப் பிரச்சினையில் உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம். நாத்தனார், மாமியார் வகையில் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். எரிவாயு குழாயை மாற்றுவது நல்லது. மற்றவர்களின் பெயர்களில் உள்ள வாகனத்தை பயன்படுத்த வேண்டாம்.

குரு உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தை பார்ப்பதால் வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வேற்று மொழிப் பேசுபவர்களால் ஆதாயம் உண்டு. ஷேர் மூலம் பணம் வரும். குரு உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டை பார்ப்பதால் வேலைக்கு விண்ணப் பித்திருந்தவர்களுக்கு வேலைக் கிடைக்கும். குரு 12-ம் வீட்டை பார்ப்பதால் புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

மீனம்…. 

அருகில் இருப்பவர்களின் குறை, நிறைகளை சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்துபவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு செல்வாக்கையும், செல்வ செழிப்பையும் தந்த குருபகவான் 01.05.2024 முதல் 13.04.2025 வரை ராசிக்கு 3-ம் வீட்டில் மறைகிறார். 3-ம் இடத்து குரு முடக்கிவிடுமே என்றெல்லாம் கவலைப்பட வேண்டாம். உங்களுடைய ராசிநாதன் குரு என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. பணவரவு தொடரும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். புது வாகனமும் வாங்குவீர்கள். இடம் மாறுவீர்கள். உங்களிடம் எழுத்துத் திறமை அதிகரிக்கும். ரசனைக்கேற்ப வீடு அமையும். கணவருக்கு வேலைக் கிடைக்கும். குருபகவான் மாங்கல்ய ஸ்தானமான 7-ம் வீட்டை பார்ப்பதால் கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். சிலர் தனிக் குடித்தனம் செல்வீர்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு நல்ல விதத்தில் முடியும். உங்களிடம் மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. 3-ம் இடத்தில் அமரும் இந்த குருவால் திட்டமிடாத விஷயங்களில் அலைச்சல் ஏற்படும். சின்ன சின்ன வேலைகளைக் கூட முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை போராடித் தான் முடிக்க வேண்டி வரும். மற்றவர்களின் ஆலோசனையைக் கேட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். இளைய சகோதர வகையில் பகைமை வரக்கூடும். கூடாப்பழக்க வழக்கத்தை தவிர்ப்பது நல்லது.

மாமனார், மாமியார் வகையில் மனத்தாங்கல் வரம். குரு 7-ம் வீட்டை பார்ப்பதால் கணவர் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துக் கொள்வார். குரு 9-ம் வீட்டை பார்ப்பதால் சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். குரு லாப வீட்டை பார்ப்பதால் மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். குழந்தை பாக்கியம் உண்டு. சிலர் புதிதாக முதலீடு செய்து புது தொழில் தொடங்குவீர்கள். நாத்தனாருக்கு நல்ல இடத்தில் திருமணம் முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!