Skip to content
Home » நாளை மாலை 6.04 மணிக்கு நிலவில் இறங்கும் லேண்டர்……கடைசி 15 நிமிடங்களில் நடப்பது என்ன?

நாளை மாலை 6.04 மணிக்கு நிலவில் இறங்கும் லேண்டர்……கடைசி 15 நிமிடங்களில் நடப்பது என்ன?

பூமியின் துணைக் கோளான நிலவு (சந்திரன்) பற்றிய ஆராய்ச்சியில், ரஷியா, அமெரிக்கா, சீனா, ஜப்பானுக்கு அடுத்தபடியாக, இந்தியா முன்னணியில் இருக்கிறது. இதுவரை, சந்திரயான்-1, சந்திரயான்-2 ஆகிய இரண்டு விண்கலங்களை நிலவுக்கு அனுப்பி, அங்கு தண்ணீர் இருப்பதை உறுதி செய்துள்ளது.

தற்போது, நிலவின் தென் துருவத்தில், இதுவரை யாரும் ஆய்வு செய்யாத இடத்தில், தடம் பதிக்க இந்தியா முயற்சி மேற்கொண்டு, கடந்த மாதம் (ஜூலை) 14-ந்தேதி சந்திரயான்-3 விண்கலத்தை அனுப்பியது. பூமிக்கும், நிலவுக்கும் இடையேயுள்ள 3 லட்சத்து 84 ஆயிரம் கி.மீ. தூரத்தை 40 நாட்கள் பயணித்து கடக்கும் திட்டத்துடன் புறப்பட்ட சந்திரயான்-3, முதலில் புவி வட்டப்பாதையில் பல்வேறு நிலைகளில் சுற்றிவந்து, பிறகு நிலவு நோக்கி பயணித்து, அதன் வட்டப்பாதைக்கு மாற்றப்பட்டது.

தற்போது, நிலவு வட்டப்பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும் சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள உந்து கலனில் இருந்து லேண்டர் கருவி வெளியே கொண்டுவரப்பட்டுள்ளது. லேண்டர் கருவி, அதே வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டே நிலவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. சரியாக, நாளை (புதன்கிழமை) மாலை 5.45 மணிக்கு லேண்டர் கருவியை நிலவின் தென் துருவத்தில் தரை இறக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. பிறகு, அதில் சிறு மாற்றம் செய்யப்பட்டு, 19 நிமிடங்கள் தாமதமாக மாலை 6 மணி 4 நிமிடத்துக்கு நிலவில் தரை இறக்கப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகளால் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களும், அண்ணாந்து நிலவைப் பார்த்தபடி, லேண்டர் கருவியின் சாதனை பயணத்தின் வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஆனால், கடைசி 15 நிமிடங்கள் ‘திக்திக்’ நிமிடங்களாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், சந்திரயான்-2 இந்த இடத்தில்தான் தோல்வி அடைந்தது. எனவே, கடைசி 15 நிமிடங்கள் லேண்டர் கருவியின் செயல்பாட்டை நொடிக்கு நொடி எச்சரிக்கையுடன் கண்காணிக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் தயார் நிலையில் உள்ளனர்.

தற்போது, நிலவை தொட்டுவிடும் தூரத்தில் லேண்டர் கருவி சுற்றி வருகிறது.  கடைசி 15 நிமிடத்துக்கு முன்பு லேண்டர் கருவி நிலவுக்கு மேலே 30 கி.மீ. உயரத்துக்கு கொண்டுவரப்படும். அதன் பிறகு நடக்கும் நிகழ்வுகள் 8 கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. முதலில், லேண்டர் கருவி நிலவுக்கு நெருக்கமாக 30 கி.மீ தொலைவிலும், அதிகமாக 100 கி.மீ. தூரத்திலும் சுற்றி வரும். அந்த நேரத்தில், தென் துருவத்தில் மென்மையாக தரையிறங்கச் செய்யும் செயல்முறை மேற்கொள்ளப்படும்.

லேண்டர் கருவியின் அடியில் உள்ள 4 கால்களும் கீழ்நோக்கி இல்லாமல், பக்கவாட்டில் இருக்கும்படி செய்யப்படும். அதன்பிறகு, ராக்கெட் தொழில் நுட்பத்தை செயல்படுத்தி தரையிறக்கப்படும். எப்படி, முதலில் பூமிக்கு வெளியே சந்திரயான்-3-ஐ ராக்கெட் கொண்டு சென்றதோ, அதேபோல், நிறைவாக லேண்டர் கருவியை நிலவில் தரையிறங்கச் செய்யும்போதும் அதே தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட இருக்கிறது. லேண்டர் வேகம் குறையும் அதாவது, லேண்டர் கருவியின் கால்களில் சிறு ராக்கெட்டுகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. நிலவில் லேண்டர் கருவியை தரையிறக்கும்போது, அதன் வேகம் சற்று அதிகமாக இருக்கும்.

அதை குறைக்க, இந்த ராக்கெட்டுகளை இயக்கும்போது, தரையிறங்கும் லேண்டர் கருவியை இந்த ராக்கெட்டுகள் எதிர்த்து மேல் நோக்கி தள்ளும். இந்த எதிர்வினைகளால், லேண்டர் கருவியின் வேகம் குறையும். நிலவுக்கு நெருக்கமாக 7.4 கி.மீ. உயரத்தில் லேண்டர் கருவி வரும்போது, அதன் வேகம் மணிக்கு 1,200 கி.மீ. என்ற அளவில் குறைந்துவிடும். இதுவரையிலான முதற்கட்ட நிகழ்வுகளுக்கு 10 நிமிடங்கள் தேவைப்படும்.

அடுத்த 5 நிமிடங்களில், எஞ்சிய 7 கட்ட பணிகள் நடைபெறும். 2-வது கட்டத்தில், நிர்ணயிக்கப்பட்ட இடத்தை நோக்கி லேண்டர் கருவி செல்கிறதா? அல்லது அதன் பாதையை மாற்றுவதற்கான தேவை எதுவும் இருக்கிறதா? என்று ஆராயப்படும். மேலும், நிலவில் இருந்து லேண்டர் கருவியின் உயரம் 7.4 கி.மீ. என்பதில் இருந்து 6.8 கி.மீ. ஆக குறைக்கப்படும். இந்தக் கட்டத்தில், 2 முக்கிய நிகழ்வுகள் நடைபெறும். முதலாவதாக, பக்கவாட்டை நோக்கி இருக்கும் லேண்டர் கருவியின் கால்கள், தரையிறங்குவதற்கு வசதியாக சுமார் 50 டிகிரி அளவுக்கு கீழ்நோக்கி திருப்பப்படும். அடுத்ததாக, லேண்டர் கருவி தரையிறங்கும் இடம் துல்லியமாக முடிவு செய்யப்படும்.

இதற்காக, செயற்கை நுண்ணறிவு கருவி லேண்டருடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு கருவி, லேண்டரை பாதுகாப்பாக தரையிறக்குவதுடன், நிலவின் தரைப்பகுதியை பல்வேறு கோணங்களில் படம் பிடித்துக் கொண்டே செல்லும். நிலவுக்கு மிக அருகில்   அதாவது 800 மீட்டர் உயரத்தில் லேண்டர் கருவி வரும்போது, 3-வது கட்டம் செயல்படுத்தப்படும். அதாவது, சைக்கிளில் பிரேக் பிடித்தால் வேகம் குறைவதைப் போல், லேண்டரில் பொருத்தப்பட்டுள்ள ராக்கெட் என்ஜினை முன்புறமாக இயக்கினால், லேண்டர் கருவியின் வேகம் படிப்படியாக குறைந்துகொண்டே வரும்.

அதாவது, மணிக்கு 1200 கி.மீ. வேகத்தில் சென்று கொண்டிருந்த லேண்டர் கருவி, 800 மீட்டர் உயரத்துக்கு வந்த பிறகு, அதன் வேகம் பூஜ்ஜியமாகிவிடும். 4-வது கட்டமாக, ராக்கெட்டின் விசையை குறைத்து, லேண்டர் கருவியை நிலவின் தரையில் இருந்து 150 மீட்டர் உயரத்துக்கு மிக அருகில் கொண்டுவரப்படும்.

150 மீட்டர் உயரத்துக்கு லேண்டர் கருவி வந்த பிறகு, 22 நொடிகள் அந்தரத்தில் அப்படியே மிதக்கும். இந்த நேரத்தில், லேண்டர் கருவியில் இருக்கும், இடர்பாடுகளை உணர்ந்து ஆபத்தை தவிர்க்கும் கேமராக்கள் செயல்படத் தொடங்கும். ஏனென்றால், லேண்டர் கருவி தரையிறங்கும் போது, அதன் 4 கால்களில் ஒன்று பாறை மேல் பட்டாலோ அல்லது குழிக்குள் சென்றாலோ சாய்ந்து விழுந்து விடும். எனவே, சரியான இடத்தை தேர்வு செய்வதற்குத்தான் அந்த 22 நொடிகள் தாமதிக்கப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!