கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 1000க்கும் மேற்பட்ட சவரன் தங்க நகைகளை மணப்புரம் கோல்டு லோன் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். 2022 ஆண்டு மணப்புரம் ஷேர் scheme மூலம் மாதம் ஒரு பவுன் நகைக்கு 2000 ரூபாய் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியதால் முதலீடு செய்துள்ளனர். 2022-23 ஆண்டுகள் வரை மாத மாதம் வட்டி வந்த நிலையில் தற்பொழுது டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் தொகை வங்கி கணக்கிற்கு ஏறாத காரணத்தினால் சந்தேகம் அடைந்த வாடிக்கையாளர்கள் முதலீடு செய்த தங்க நகைக்கு உத்தரவாதம் இல்லை என்று தெரிய வந்த நிலையில், நகையை திருப்பி கேட்டு நிதி நிறுவனத்தில் முறையிட்டனர்.
அப்போது ஏற்கனவே பணியாற்றிய நபர்கள் பணியில் இல்லை என்றும், நகைகள் குறித்து தெரியாது என்று கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நிதி நிறுவனத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்க நகைகளை முதலீடு செய்தால் மாதந்தோறும் வட்டி கிடைக்கும் என்று எங்களை ஏமாற்றி, எங்கள் பெயரிலும், அடுத்த மாதத்தில் அதை மாற்றி அடுத்தவர் பெயரிலும் வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர்களிடம் அரவக்குறிச்சி போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது நகைகளை தங்களிடம் காண்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
ஏற்கனவே இருந்த ஊழியர்கள் தற்போது பணியில் இல்லாத காரணத்தால் தங்களது உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வந்த பிறகு முழுமையான தகவல்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். அதனை ஏற்றுக் கொள்ள மறுத்த வாடிக்கையாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பள்ளப்பட்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.