மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரு மாதங்களாக நடைபெறும் வன்முறையை கட்டுப்படுத்தாத மணிப்பூர் மாநில அரசையும், மத்திய அரசையும் கண்டித்து நேற்று தஞ்சாவூரில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மாணவர் சங்கத்தினர் சார்பில் தனித்தனியாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரு மாதங்களாக நிகழும் வன்முறையால் பொதுமக்களும், அப்பாவி பெண்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வன்முறையை கட்டுப்படுத்தாத மணிப்பூரை ஆளும் பாஜக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும். மாநிலத்தில் பெண்கள் மீதான பாலியன் கொடுமைகளை உடன் நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திமுக:
தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநில மகளிர் அணி ஆலோசனை குழு உறுப்பினர் காரல்மார்க்ஸ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி உள்ளிட்ட 300க்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர்.
மார்க்சிஸ்ட் :
அதே போல் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாநகர செயலாளர் எம்.வடிவேலன், ஒன்றிய செயலாளர் கே.அபிமன்னன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.செந்தில்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் ஏராளமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர்.
இந்திய மாணவர் சங்கம்:
தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி முன்பு மணிப்பூர் கலவரத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட கிளை நிர்வாகி ஜெகன்ராஜ் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டு, மத்திய அரசையும், மணிப்பூர் மாநில அரசையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.