உத்தர பிரதேச மாநிலம் பெரேலி பகுதியில் வசித்து வந்த ஒரு ஜோடிக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இருவரும் சுமார் இரண்டரை ஆண்டுகள் பழகி வந்தனர். இதனால் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இந்த நிலையில் திருமண நாள் அன்று திடீரென மணமகன் திருமணம் நடக்கும் இடத்தில் இருந்து ஓடிவிட்டார். இதனால், மணமகள் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், இரண்டரை ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்ய இருந்த மணமகள் கவலைப்படாமல் மணமகனுக்காக காத்திருந்தார்.
நேரம் செல்ல செல்ல அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் போன் செய்து, எங்கு இருக்கிறார்?, திருமணத்திற்கு இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கும் நிலையில் எங்கு சென்றாய்? என்று கேட்டுள்ளார். திருமணத்திற்கு எனது தாயாரை அழைத்து வர சென்றுள்ளேன் என மணமகன் சமாளித்துள்ளார். ஆனால், மணமகள் அதை நம்பாமல், மணமகனை உறவினர்களுடன் சேர்ந்து தேட ஆரம்பித்தார்.
அப்போது பெரேலி நகரின் புறநகரில் உள்ள ஒரு பஸ் நிலையத்தில் பேருந்தில் உட்கார்ந்து இருந்தவரை கண்டுபிடித்தனர். சுமார் 20 கி.மீ. தூரத்தில் இருக்கும் அந்த பேருந்து நிலையத்தில் இருந்து மணமகனை வலுக்கட்டாயமாக பிடித்து வந்தனர். பின்னர், ஒரு கோவில் முன் வைத்து திருமணம் நடைபெற்றது. மணமகள் திருமண உடையில் இருந்தாலும், மணமகன் பேண்ட், டீசர்ட் தான் அணிந்து இருந்தார். திருமணத்திற்கு வந்த நபர்கள், மணமகள் மனம் தளாராமல் ஓடிய மணமகனை பிடித்து திருமணம் செய்த தைரியத்தை வெகுவாக பாராட்டினர். மணமகனுக்கு சளி பிடித்துள்ளதாகவும், அதனால் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.