டெல்டா மாவட்டங்களில் நீர் பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலனைக்கு தண்ணீர் வந்து அடைந்தது. இரண்டு கரைகளையும் தொட்டபடி முக்கொம்புவில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது – இன்று காலை நிலவரப்படி முக்கொம்பு மேலணைக்கு நீர் வரத்து 2000 கன அடியாக உள்ளது – 2000 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
மாயனூர் கதவணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து 8200 கன அடியாக உள்ளது . கடந்த சில மாதங்களாக வறண்டு காணப்பட்ட காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்வதை ஆர்வமுடன் மக்கள் பார்த்து செல்கின்றனர்.
ஆரம்பத்தில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடிவீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அதன்பிறகு படிப்படியாக நீர் வரத்து அதிகரித்தது. முக்கொம்பில் இருந்து வெளியேறும் தண்ணீர் இன்று இரவு கல்லணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை காலை கல்லணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. வெண்ணாறு, காவிரி, கொள்ளிடம், கல்லணை கால்வாய் ஆகியவற்றில் தண்ணீர் திறக்கப்படும். இதில் அமைச்சர்கள், கலெக்டர்கள், எம்.பி. ,எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்கிறார்கள்.