Skip to content
Home » அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை…. அமலாக்கத்துறை திணறல்

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை…. அமலாக்கத்துறை திணறல்

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை 18 மணி நேரம் தனி அறையில் வைத்து டார்ச்சர் செய்ததன் காரணமாக  அவர் மிகவும் பாதிக்கப்பட்டு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  இதற்கிடையே  அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு முன்  கடந்த 15-ம் தேதி நடைபெற்றது. அதில் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவனைக்கு மாற்ற அவரது தரப்பு கோரிக்கை வைத்த நிலையில், அதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்கவும், அமலாக்கத்துறை தனியாக மருத்துவக்குழு ஒன்றை ஏற்படுத்தி, அவரது உடல்நிலையை காவேரி மருத்துவமனையில் பரிசோதிக்கலாம் என்றும் கூறியுள்ளது. ஆட்கொணர்வு மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவலில் தொடர வேண்டும் என்றும் கூறி வழக்கை ஜூன் 22-ம் தேதி (அதாவது இன்று) ஒத்திவைத்தனர்.

அதன்படி இந்த அந்த மனு, நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கில் செந்தில் பாலாஜி   மனைவி தரப்பில்  வழக்கறிஞர் இளங்கோ ஆஜராகி வாதங்களை முன்வைத்தார்.

ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது தான், அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டதால், மனுதாரர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.  அதிமுக ஆட்சியில் நடந்த  குற்றத்துக்கு, திமுக  ஆட்சிக்கு வந்ததும் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. இது பழிவாங்கும் நடவடிக்கை. அமைச்சரை ஆஸ்பத்திரியில் சேர்த்ததே அமலாக்கத்துறைதான். பின்னர் எப்படி போலியான அறுவை சிகிச்சை என கூற முடியும்.?

ஏற்கனவே 5 முறை அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு 4 முறை  அமைச்சரும், ஒருமுறை ஆடிட்டரும் ஆஜராகி உள்ளனர்.  சட்ட விதிகளுக்கு உட்பட்டு அவர் கைது செய்யப்படவில்லை. இந்த மனு விசாரணைக்கு உகந்தது தான், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்  என வாதிட்டார். இந்த வாதத்தின்போது, வழக்கறிஞர் இளங்கோ,  நடிகர் சஞ்சய்தத், பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் வழக்குகளை உதாரணம் காட்டி வாதிட்டார். நீதிமன்ற காவல் முடிந்ததும், அவரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது. காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரமில்லை.

நீதிபதிகள்: சட்டப்படி விசாரணைக்கு உகந்ததாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்வது உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது.

அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர்  துஷார் மேத்தா,   அமைச்சர் செந்தில் பாலாஜி, ஆஸ்பத்திரியில் இருக்கும் நாட்களை காவலாக கருதக்கூடாது, ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல.   இதை விசாரிக்கக்கூடாது என்றார்.

தொடர்ந்து இருதரப்பு வழக்கறிஞர்களும் காரசாரமாக வாதங்களை முன்வைத்தனர்.  2 மணி நேரம்  கடுமையான வாதம் நடந்தது.

பின்னர் இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என அமலாக்கத்துறை வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

திமுக வழக்கறிஞர்  என். ஆர். இளங்கோ அடுக்காக  வைத்த வாதங்களை,  எதிர்தரப்பு வழக்கறிஞர்    சற்றும் எதிர்பார்க்கவில்லை. பொதுவாக இன்றைய  தினமே இந்த வழக்கில் நீதிபதிகள் உத்தரவு பிறப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,   அமலாக்கத்துறை வழக்கறிஞர் வழக்கை தள்ளிவைக்க கோரிக்கை விடுத்தார். இதனால் வழக்கு வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம்  துஷார் மேத்தா தனது வாதத்தை முன் வைப்பார்.   அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த வழக்கில் அமலாக்கத்துறைக்கு நேற்று உச்சநீதிமன்றத்திலும், இன்று சென்னை உயர்நீதிமன்றத்திலும் அவர்கள் நினைத்தது நடக்கவில்லை. எனவே அமலாக்கத்துறை இப்போது புலி வாலை பிடித்த கதையாக சிக்கி கொண்டிருப்பதாக  தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!