தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று நாகையில் நடைபெற்றது. நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், வாரிய தலைவர்கள் கௌதமன், மதிவாணன் மற்றும் எம் எல் ஏ ஷாநவாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்டத்திலுள்ள 6029 பள்ளி மாணவ,மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறிய அமைச்சர் ரகுபதி, பாஜகவிற்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்த கட்சி அதிமுக என்றும்,பாஜகவினர் எது சொன்னாலும் அதிமுகவினர் கை தூக்குவார்கள். அதுபோல தான் டில்லி அரசுக்கு எதிரான, மத்திய அரசின் மசோதாவிற்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. மத்திய அரசு எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அவை அனைத்தும் மாற்றியமைக்கப்படும்.
மேட்டூரில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. கடைமடை மாவட்டத்தில் கருகும் பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அப்படி ஒருவேளை பயிர்களை காப்பாற்ற முடியவில்லை என்றால்? மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் மூலம் கருத்து கேட்கப்பட்டு, பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் குறுவை பயிர்களுக்கு காப்பீடு வழங்குவது குறித்து தமிழக முதல்வர் வேளாண்துறை அமைச்சரிடம் பேசி உரிய முடிவெடுப்பார் எனக்கூறிய அமைச்சர் ரகுபதி, காவிரி விவகாரத்தில் முந்தைய அதிமுக அரசு நடந்து கொண்டது போல் அல்லாமல், கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க கூடிய தண்ணீரை பெற்றுத்தர தமிழக அரசு அழுத்தம் கொடுக்கும் என்றார்.