கும்பகோணத்தில் காவிரி ஆற்றங்கரையோரம் சாலை அகலப்படுத்தும் பணி தொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:
புகழ்பெற்ற கும்பகோணம் மாநகரத்திற்கு நாள்தோறும் வருகை தரும் ஆன்மீக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் இதனை சுற்றி கிராம பகுதிகள் அதிகம். இந்த நிலையில் ஏற்கனவே மாநகரில் உள்ள சாலைகள் மிகவும் குறுகிய சாலைகளாக உள்ளது. இந்த மாநகருக்கு வருவோரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து வருவதால் இருக்கும் சாலைகளை அகலப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
எனவே மாநகரில் நீதிமன்றம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகள் அமைந்துள்ள பாலக்கரை பகுதியில் காவிரி ஆற்றங்கரையை ஒட்டிய சாலையை அகலப்படுத்த வேண்டும் என எம்எல்ஏ அன்பழகன் சட்டமன்றத்தில் வலியுறுத்தினார். அதனடிப்படையில் இப்பகுதியை ஆய்வு செய்தேன். ஏறத்தாழ 700 மீட்டர் அகலம் இந்த சாலையை விரிவுபடுத்தினால் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும். தற்போது இதனை பார்வையிட்டுள்ளேன். இது குறித்து சென்னையில் உள்ள துறை செயலாளரிடம் சாத்தியக்கூறு உள்ளதா என்பதை கேட்டறிவோம். காவிரி ஆற்றங்கரையை ஒட்டியுள்ள பகுதியாக உள்ள காரணத்தினால் இதற்கு நீர் மேலாண்மை துறையிடமிருந்து மறுப்பில்லா சான்று பெற வேண்டும். எனவே சாத்தியக்கூறு இருக்குமேயானால் முதலமைச்சரிடம் கூறி இந்த நிதியாண்டிலேயே முன்னுரிமை அளித்து சாலை அகலப்படுத்தப்படும் பணி விரைவில் துவங்கு.
இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன், மாநகர செயலாளர் சு.ப.தமிழழகன், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்தலைவர் முத்து செல்வம், ஒன்றிய துணைப் பெருந்தலைவர் கணேசன், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சுதாகர், தலைமை பொறியாளர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்