மயிலாடுதுறையில் ஜெயின் சமூகத்தை சேர்ந்த ஒருவர் செல்போன் கடை வைத்திருக்கிறார். இவரது மகள் 19வயது நிறைவடைந்தவர். இவருக்கும் மயிலாடுதுறையை சேர்ந்த 20 வயதான பாலசந்தர் என்ற வாலிபருக்கும் காதல் ஏற்பட்டது. பாலசந்தர் காரைக்காலில் போட்டோ ஸ்டுடியோவில் வேலை பார்த்துவருகிறார்.
இரண்டு தினங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். திருமண வயது வராத இளைஞருடன் திருமணம் செய்தது செல்லாது அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஜெயின் சமூகத்தினர் புகார் அளித்தனர் .ஆனால் அந்த பெண்ணோ தனக்கு 19 வயது ஆகிவிட்டது. தனது கணவரோடு தான் செல்வேன் என்று மயிலாடுதுறை காவல்நிலையத்தில் கூறினார்.
பையனுக்கு இன்னும் திருமண வயது ஆகவில்லை. எனவே அவனுக்கு திருமணம் ஆனது செல்லாது. அவனுடன் பெண்ணை அனுப்பக்கூடாதுஎன பெண் வீட்டார் கூறினர். இதற்கிடையே தனக்கு திருமண வயது ஆகிவிட்டது என கூறிய மாப்பிள்ளை பெண்ணுடன் போலீஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.இந்த நிலையில் ஜெயின் சமூகத்தினர் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு சாலை மறியல் நடத்தினர். இதனால் மயிலாடுதுறை- கும்பகோணம்சாலையில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக ஜெயின் சமூகத்தினர் 34 பேரை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
காதல் திருமணம் செய்த பாலசந்தருக்கு வயது என்ன, அதற்கான ஆவணங்கள் போன்றவற்றை ஆய்வு செய்யும் பணியில் போலீசார் இப்போது ஈடுபட்டுள்ளனர்.