நாகை செக்கடிதெருவில் தனியாக வசித்து வந்தவர் சீதை (78). இவர் கடந்த ஐந்து தினங்களுக்கு முன் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கிடந்தார். மூதாட்டி அலங்கோலமான நிலையில் உயிரிழந்ததை கண்ட அவரது உறவினர்கள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, நாகை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த நாகை நகர போலீசார் மூதாட்டி மர்ம மரணம் குறித்து காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் 2, தனிப்படைகள் அமைத்து புலன் விசாரணையில்
இறங்கினர். அதனை தொடர்ந்து மூதாட்டி வசித்து வந்த தெருவில் இருந்த இருபதுக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அந்தப் பகுதியில் இரு தினங்களாக நள்ளிரவில் வீடுகளை நோட்டமிட்டு சென்ற செக்கடித் தெருவை சேர்ந்த வெங்கடேஷ் (37) என்ற நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து வந்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் மது போதையில் இருந்த வெங்கடேஷ் சம்பவத்தன்று நள்ளிரவில் மூதாட்டியின் வீட்டின் உள்ளே புகுந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ததும், அப்போது மூதாட்டி கத்தி கூச்சலிடவே வாயில் துணியை வைத்து பொத்தி அவரை கொலை செய்துவிட்டு தப்பியோடியதும் தெரியவந்தது. இதையடுத்து மூதாட்டியை பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை செய்த கொடூரன் வெங்கடேஷை, தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.